'83' படத் தயாரிப்பாளர்களின் 4 நிபந்தனைகள்: திரையரங்க உரிமையாளர்கள் ஒப்புக்கொள்வார்களா?

By செய்திப்பிரிவு

'83' திரைப்படத்தை வெளியிட படத்தின் தயாரிப்பாளர்கள் திரையரங்குகளுக்கு 4 நிபந்தனைகளை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் 1983 உலகக்கோப்பை வெற்றிக் கதையைச் சொல்லும் '83', ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்தது. தற்போது இந்த வருடம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. அணியின் தலைவர் கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ளார். கபீர் கான் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரன்வீர் சிங்கின் மனைவி தீபிகா படுகோன், கபில்தேவ் மனைவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கரோனா நெருக்கடியால் படத்தின் வெளியீடு தள்ளிப்போய் தற்போது கிறிஸ்துமஸ் வார இறுதியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் படத்தைத் திரையரங்குகளில் வெளியிட தயாரிப்புத் தரப்பு சில முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளது.

விர்ச்சுவல் ப்ரிண்ட் ஃபீ (Virtual Print Fee) எனப்படும் திரையிடலுக்கான கட்டணத்தை திரையரங்குகள் கேட்கக் கூடாது. இது ஒரு திரைக்கு ரூ.20,000 வரை வாங்கப்படுகிறது. ப்ரொஜெக்டர், ஒலி அமைப்பு உள்ளிட வசதிகளின் தரத்தை மேம்படுத்த இந்தக் கட்டணம் திரையரங்குகளால் வாங்கப்படுகிறது. ஆனால், அரங்குகள், ஒலி ஒளி அமைப்புக்குச் செலவழித்திருக்கும் பணம் இந்நேரத்துக்கு அவர்களுக்கு மீண்டும் வந்திருக்கும் என்பதால் தற்போது இந்தப் படத்துக்குக் கட்டணம் வாங்கக் கூடாது எனத் தயாரிப்பாளர்கள் கோரியுள்ளனர்.

அடுத்தது, மொத்த அளவில் 50 சதவீத டிக்கெட்டுகளை மட்டுமே விற்க வேண்டும் என்பதால் '83' திரைப்படத்துக்கு அதிகப்படியான திரைகளை ஒதுக்க வேண்டும். படத்தின் பொருட்செலவு அதிகம் என்பதால் இந்த நிபந்தனை.

தற்போதுள்ள முறைப்படி திரையரங்கில் வெளியான 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் படத்தை வெளியிட வேண்டும். ஆனால், '83' திரைப்படத்துக்கு, இந்த விதியைத் தளர்த்தி 4 வாரங்களுக்குப் பிறகு ஓடிடி வெளியீட்டுக்குத் திரையரங்குகள் சம்மதிக்க வேண்டும்.

கடைசி நிபந்தனை, முதல் இரண்டு வாரங்களில் படத்தைப் பார்க்க ரசிகர்கள் வரவில்லையென்றால், படத்தை உடனடியாக ஓடிடியில் வெளியிட ஆட்சேபனை இல்லை எனத் திரையரங்க உரிமையாளர்கள் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். இதனால் தயாரிப்பாளர்கள் படத்தை டிஜிட்டலில் கட்டண முறைப்படியோ, வழக்கமான ஓடிடி வெளியீடாகவோ வெளியிடலாம்.

ஒரு பக்கம், நஷ்டத்தில் இருக்கும் திரையரங்குகளுக்கு ரசிகர்களை வரவழைக்கும் பிரம்மாண்ட படைப்பாக '83' இருக்கும் என்பதால், இந்த நிபந்தனைகளைத் திரையரங்குகள் ஏற்பது நல்லது என்று கூறப்பட்டாலும், ஏற்கெனவே 6 மாத ஊரடங்கில் பெரும் நஷ்டமடைந்திருக்கும் திரையரங்குகள் இப்படியான கடுமையான நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்வது கடினம் என்றும் பார்க்கப்படுகிறது.

தயாரிப்புத் தரப்பான ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இதுபற்றிக் கேட்டபோது, இன்னும் இது குறித்த பேச்சுவார்த்தை தொடங்கவில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், கார்னிவல் சினிமாஸ் மல்டிப்ளக்ஸின் தரப்பில், தயாரிப்பாளர்கள் இன்னும் எதுவும் தங்களிடம் பேச ஆரம்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE