மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி: நவம்பரில் படப்பிடிப்பு  தொடக்கம்

By செய்திப்பிரிவு

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் 'தடம்'. கடந்தாண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக்காகி வருகிறது.

இந்தப் படத்துக்குப் பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமிருந்தன. விஜய் படத்தை இயக்கவுள்ளார், உதயநிதி ஸ்டாலின் படத்தை இயக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகி வந்தன.

ஆனால், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள புதிய படத்தை இயக்க ஒப்பந்தமானார் மகிழ் திருமேனி. இதன் பணிகள் கரோனா ஊரடங்கினால் தாமதமானது. எப்போது படப்பிடிப்பு என்பதே தெரியாமல் இருந்தது.

தற்போது நவம்பர் 4-ம் தேதி சென்னையில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதன் நாயகியாக நிதி அகர்வால் ஒப்பந்தமாகியுள்ளார். முதலில் நாயகி சம்பந்தப்பட்ட காட்சிகளுடன் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை முடித்துவிட்டு, விஜய் நடிக்கவுள்ள படத்தினை இயக்குவார் மகிழ் திருமேனி எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE