நடிகர் அனில் கபூர், தன் வாழ்க்கையில் தனது பலவீனமே உணவுதான் என்று சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்துப் பகிர்ந்திருக்கும் அனில் கபூர், "எல்லோருக்கும் பலவீனம் இருக்கிறது. என்னுடைய பலவீனம் உணவுதான். எனக்குள் இருக்கும் பஞ்சாபி சிறுவனின் நாக்குக்குத் தீனி தேவைப்படும். (உணவைப் பார்த்தால்) என் வயிறை விட என் கண்கள் பெரிதாகும்.
ஊரடங்கின்போது இன்னும் உடலைக் கச்சிதமாக மாற்ற வேண்டும் என்று எனக்கு நானே இலக்கு நிர்ணயித்தேன். அந்தப் புதிய தோற்றத்துக்கு, புதுவிதமான உணவு அணுகுமுறை தேவை. எனது பயிற்சியாளரும், எனது மகனும் என் சாப்பாட்டுக் கட்டுப்பாட்டை நினைவுபடுத்தும் பொறுப்பினை எடுத்துக் கொண்டனர். நான் முயல்கிறேன், போராடுகிறேன். சில நேரங்களில் வீழ்ந்து விடுகிறேன். எனவே வீட்டில் இருக்கும் அனைவரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர்.
சமைப்பவர்கள் நான் சாப்பிடும்போது என்னைச் சூழ்ந்து விடுவார்கள். உடல் ஆரோக்கியம் என்பது தனி நபர் முயற்சி அல்ல. நமக்குத் தேவைப்படும்போது நமக்குக் கிடைக்கும் ஆதரவும், ஊக்கமும்தான் அதில் முக்கியம். உங்களுக்கு டயட் திட்டம் இருந்தால், அதை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென்றால் எப்போதுமே உங்கள் குடும்பத்தை அதில் சம்பந்தப்படுத்துங்கள்.
இது எளிதா என்று கேட்டால், உண்மையில், எல்லா நேரங்களிலும் எளிதல்ல. சில நேரங்களில் அந்த பஞ்சாபி சிறுவன் சற்று சோர்ந்துவிடுவான். சில நாட்களில், எல்லாவற்றுக்கும் ஒரு மதிப்பு உண்டு என்பது போல உணரச் செய்வான் இந்தப் புகைப்படத்தில் இருப்பதைப் போல" என்று பதிவிட்டுள்ளார்.
ஒரு புகைப்படத்தையும் அனில் கபூர் பகிர்ந்துள்ளார்.