நடிகர் ராஜசேகருக்கு கரோனா தொற்று தீவிரம் - மகள் ஷிவாத்மிகா தகவல்

By செய்திப்பிரிவு

கரோனா அச்சுறுத்தல் தொடங்கியவுடன் பிரபலங்கள் பலரும் தங்களுடன் சமூக வலைதளத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்கள். ஆனால், அனைத்தையும் தாண்டி பல்வேறு பிரபலங்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டு, அதிலிருந்து மீண்டு வருகிறார்கள்.

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், தமன்னா, அர்ஜுன் கபூர், மலைகா அரோரா, ஜெனிலியா, ராஜமெளலி உள்ளிட்ட பலருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

அந்த வகையில், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான ராஜசேகர், அவரது குடும்பத்தினருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை ராஜசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ராஜசேகருக்கு கரோனா தொற்று தீவிரமடைந்திருப்பதாக அவரது மகள் ஷிவாத்மிகா ராஜ்சேகர் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

கரோனாவுடனான அப்பாவின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. எனினும் அவர் கடுமையாக போராடி வருகிறார். உங்களுடைய பிரார்த்தனைகளும், வாழ்த்துகளும் எங்களை இதிலிருந்து காக்கும் என்று நாம் நம்புகிறேன். அப்பா விரைவில் குணடமைய வேண்டி பிரார்த்திக்குமாறு உங்களை கேட்டுக் கொள்கிறேன். உங்களது அன்பினால் அவர் மீண்டு வருவார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE