25 ஆண்டுகளாகியும் உலகைத் தொடர்ந்து வசீகரிக்கும் ஒரு திரைப்படம் ‘டிடிஎல்ஜே’ என்று நடிகர் ஆமிர்கான் புகழாரம் சூட்டியுள்ளார்.
1995 ஆம் ஆண்டு ஷாரூக்கான், கஜோல் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘தில்வாலே துல்ஹனியா லேஜாயேங்கே’. இப்படத்தை ஆதித்யா சோப்ரா இயக்கியிருந்தார். வெறும் 4 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் அன்றைய காலகட்டத்திலேயே 102.50 கோடி ரூபாயை வசூலித்தது.
இந்தத் திரைப்படம் வெளியாகி இன்றோடு 25-வது வருடம் நிறைவடைகிறது. ஆதித்யா சோப்ராவின் முதல் படமான இது இந்தியத் திரையுலகில் வரலாறு படைத்த திரைப்படங்களில் ஒன்று. இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் திரையரங்குகளில் ஓடிய திரைப்படம் ‘டிடிஎல்ஜே’. மும்பையில் உள்ள மராத்தா மந்திர் திரையரங்கில் ஏறக்குறைய 20 ஆண்டு காலம் இப்படம் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.
‘பல்வேறு பாலிவுட் பிரபலங்களும் இப்படம் தொடர்பான நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இப்படம் குறித்து நடிகர் ஆமிர் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
''தன்னுடைய மனசாட்சியைக் கண்டுகொள்ளும் ஒரு நாயகன், தன்னுடைய குரலைக் கண்டுகொள்ளும் ஒரு நாயகி, மனம் திருந்தும் ஒரு வில்லன். நம்முடைய அன்பான, கனிவான, உயர்ந்த தன்மைகளை ‘டிடிஎல்ஜே’ ஈர்க்கிறது.
25 ஆண்டுகளாகியும் உலகைத் தொடர்ந்து வசீகரிக்கும் ஒரு திரைப்படம். ஆதி, ஷாரூக், கஜோல் மற்றும் ஒட்டுமொத்த ‘டிடிஎல்ஜே’ படக்குழுவினருக்கும் நன்றி''.
இவ்வாறு ஆமிர்கான் கூறியுள்ளார்.