கோவிட்-19 பரிசோதனைகளின் ராணியாகிவிட்டேன்: ப்ரீத்தி ஜிந்தா வேடிக்கை

By ஐஏஎன்எஸ்

தான் கோவிட்-19 பரிசோதனைகளில் நிபுணத்துவம் பெற்றுவிட்டதாக நடிகை ப்ரீத்தி ஜிந்தா வேடிக்கையாகப் பகிர்ந்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. தனது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ஆதரவு தெரிவிக்க நடிகை ப்ரீத்தி ஜிந்தா அமீரகம் சென்றுள்ளார். சமீபத்தில் தனக்கு கோவிட்-19 பரிசோதனை எடுக்கப்பட்டதன் காணொலியைப் பகிர்ந்து, "நான் கோவிட் பரிசோதனைகளின் ராணியாகிவிட்டேன். இது எனது 20-வது பரிசோதனை" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பயோ பப்பிள் என்று சொல்லப்படும், கட்டுப்படுத்தப்பட்ட வட்டத்துக்குள் இருப்பது பற்றியும் ப்ரீத்தி பகிர்ந்துள்ளார். "ஐபிஎல் அணியின் பயோ பப்பிளில் இருப்பது எப்படி இருக்கிறது என அனைவரும் கேட்கின்றனர். இது 6 நாள் தனிமையோடு ஆரம்பமாகும். ஒவ்வொரு 3-4 நாட்களுக்குக் கோவிட் பரிசோதனை செய்யப்படும். வெளியே செல்லக் கூடாது. உங்கள் அறையில் மட்டுமே இருக்க வேண்டும். பஞ்சாப் அணிக்கென இருக்கும் உணவகம், ஜிம், மைதானம், உங்கள் கார் என்று மட்டுமே செல்ல முடியும்.

ஓட்டுநர்கள், சமையல் கலை நிபுணர்கள் என அனைவரும் தனிமையில், பயோ பப்பிளில் இருப்பவர்கள். எனவே, வெளியிலிருந்து எந்த உணவும் அனுமதி கிடையாது. யாருடனும் பேச முடியாது. என்னைப் போல ஒரு சுதந்திரப் பறவையாக இருந்தால் உங்களுக்குக் கடினம். ஆனால் இது 2020 ஆம் ஆண்டு. இப்படி ஒரு தொற்றுச் சூழலில் ஐபிஎல் நடப்பதே பெரிய விஷயம் என்று நினைக்க வேண்டும்" என்று ப்ரீத்தி கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE