முத்தையா முரளிதரன் பயோபிக்கிலிருந்து விலகினார் விஜய் சேதுபதி

By செய்திப்பிரிவு

முத்தையா முரளிதரன் பயோபிக்கான '800' படத்திலிருந்து விலகியுள்ளார் விஜய் சேதுபதி.

முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 800 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்திருப்பதால், முத்தையா முரளிதரன் பயோபிக் கதைக்கு '800' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.

முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என எதிர்ப்பு உருவானது. அரசியல் கட்சித் தலைவர்கள், இலங்கைத் தமிழர்கள், இயக்குநர்கள் பாரதிராஜா, சீனு ராமசாமி, சேரன் உள்ளிட்ட பலரும் விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனிடையே, தனது பயோபிக்கிற்கு வரும் எதிர்ப்புகள் தொடர்பாக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் முத்தையா முரளிதரன். அதையும் தாண்டி எதிர்ப்புகள் வலுத்துக் கொண்டே உள்ளன. இன்று (அக்டோபர் 19) முத்தையா முரளிதரன் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், தனது பயோபிக்கிலிருந்து விலகிக் கொள்ளுமாறு விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

முத்தையா முரளிதரனின் வேண்டுகோள் அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து விஜய் சேதுபதி "நன்றி.. வணக்கம்!" என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் முத்தையா முரளிதரன் பயோபிக்கிலிருந்து விஜய் சேதுபதி விலகியிருப்பது உறுதியாகிறது.

விஜய் சேதுபதியின் விலகலால், '800' படத்தைச் சுற்றி நிலவி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அவருக்குப் பதிலாக வேறு யார் நடிக்கவுள்ளார் என்பது விரைவில் தெரியவரும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE