ரோஹித் ஷெட்டி - ரன்வீர் சிங் இணையும் சர்க்கஸ்

By செய்திப்பிரிவு

ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்கவுள்ள படத்துக்கு 'சர்க்கஸ்' எனப் பெயரிட்டுள்ளது படக்குழு.

இந்தித் திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் ரோஹித் ஷெட்டி. தொடர்ச்சியாக பல்வேறு கமர்ஷியல் படங்களை இயக்கி வருகிறார். தற்போது அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன், ரன்வீர் சிங் இணைந்து நடித்துள்ள 'சூர்யவன்ஷி' படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் வெளியீட்டுக்குத் தயாராக இருந்தாலும், அடுத்த ஆண்டுதான் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'சூர்யவன்ஷி' படத்தைத் தொடர்ந்து, மீண்டும் ரன்வீர் சிங் நாயகனாக நடிக்கும் படத்தை ரோஹித் ஷெட்டி இயக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகின. அந்தத் தகவலை உறுதிப்படுத்தும் அறிவிப்பு இன்று (அக்டோபர் 19) வெளியிடப்பட்டுள்ளது.

'சர்க்கஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ரன்வீர் சிங், பூஜா ஹெக்டே, ஜாக்குலின் பெர்னாண்டாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

ரோஹித் ஷெட்டி இயக்கும் இந்தப் படத்தினை ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் பூஷண் குமார் வழங்க, ரோஹித் ஷெட்டியே தயாரிக்கவுள்ளார். முதன்முறையாக இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளார். இது குல்ஸார் இயக்கத்தில் 1982-ம் ஆண்டு வெளியான 'அங்கூர்' என்கிற இந்திப் படத்தின் சமகால ரீமேக் எனத் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனைப் படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

'சர்க்கஸ்' படத்தை முடித்துவிட்டு, ரோஹித் ஷெட்டி 'கோல்மால் 5' மற்றும் அடுத்த 'சிங்கம்' திரைப்படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE