'800' பட சர்ச்சை: விஜய் சேதுபதி மீது பார்த்திபன் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

'800' படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகுவார் என்று பார்த்திபன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 800 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்திருப்பதால், முத்தையா முரளிதரன் பயோபிக் கதைக்கு '800' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.

முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என எதிர்ப்பு உருவாகியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், இலங்கைத் தமிழர்கள், இயக்குநர்கள் பாரதிராஜா, சீனு ராமசாமி, சேரன் உள்ளிட்ட பலரும் விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனிடையே 'துக்ளக் தர்பார்' படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்து வரும் பார்த்திபன், '800' படத்தின் சர்ச்சை குறித்து தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:

"முத்தையா முரளியின் சூழல் பந்தை, ஒத்தையா எதிர்கொள்ளும் வி(சய) சேதுபதி...

எதிர்ப்புகள் - எதிர்பார்ப்புகளாக bounce ஆகிவரும் பந்தினை லாவகமாக அடித்து boundary-யைத் தாண்டி சிக்சராக விளாசி,(அதாகப்பட்டது தமிழ் உணர்வறிந்து கைவிட்டேன் என)ஆடியன்ஸ் மட்டுமில்லாமல் அம்பையர்ஸையும் cheers girls போல ஆடவைத்து ஆரவாரத்துடன் ‘தமிழ்மக்கள்’ செல்வன்ந்தர் ஆகிவிடும் வியூகமோ?என்பதென் யூகம்!!!

(காலங்காத்தால...)நடப்பது நன்மையே. so நன்மையே நடக்கும் என நம்புவோம்!!!"

இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE