‘பதாய் ஹோ’ திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவு - இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடக்கம்

By செய்திப்பிரிவு

அமித் ரவீந்திரநாத் ஷர்மா இயக்கத்தில் வெளியான பாலிவுட் படம் ‘பதாய் ஹோ’. ஆயுஷ்மான் குர்ரானா, நீனா குப்தா, கஜ்ராஜ் ராவ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இப்படம் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது. இப்படம் 1994ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘பவித்ரம்’ படத்தை தழுவி எடுக்கப்பட்டதாகும். பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் இரண்டு தேசிய விருதுகளை பெற்றது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த பேச்சுவார்த்தைகளில் தயாரிப்பு நிறுவனமான ஜங்க்ளீ பிக்சர்ஸ் கடந்த சில மாதங்களாகவே ஈடுபட்டு வந்தது. ஆனால் அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் ‘பதாய் ஹோ’ திரைப்படம் வெளியாகி இன்றோடு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ராஜ்குமார் ராவ், பூமி பெட்னேகர் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் தொடங்கவுள்ளது. இப்படத்துக்கு ‘பதாய் டு’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நடிகை பூமி பெட்னேகர் தனது அதிகாரபூர்வ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஹர்ஷ்வர்தன் குல்கர்னி இயக்கிவரும் இப்படம் அடுத்த ஆண்டு இறுதியில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘பதாய் ஹோ’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை, தயாரிப்பாளர் போனி கபூர் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE