சுந்தர்.சி படமென்றால் கதை கேட்கமாட்டேன்: யோகி பாபு

சுந்தர்.சி படங்கள் என்றால் கதை கேட்கமாட்டேன் என்று யோகி பாபு தெரிவித்துள்ளார்.

கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'மாயா பஜார் 2016' திரைப்படம் தமிழில் ரீமேக்காகி வருகிறது. சுந்தர்.சி தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை பத்ரி இயக்கி வருகிறார். பிரசன்னா, ஷாம், ஸ்ருதி மராத்தே, அஸ்வின், யோகி பாபு, விடிவி கணேஷ், ரித்திகா சென் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இந்தப் படம் திரையரங்க வெளியீடு அல்லாமல், நேரடியாக சன் நெக்ஸ்ட் ஓடிடியிலும் சன் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளனர். ஆகையால், படத்தை சரியாகத் திட்டமிட்டு ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் நடித்திருப்பது தொடர்பாக யோகி பாபு, "அண்ணன் சுந்தர்.சி எனது குடும்ப நண்பர் போன்றவர். அவரது நிறுவனம் எனது குடும்ப நிறுவனம் போன்ற உணர்வு எனக்கு உண்டு. அவர் எப்போது கூப்பிட்டாலும் நான் வந்துவிடுவேன். கதையெல்லாம் கேட்கமாட்டேன். அப்படித்தான் இந்தப் படத்திலும் கதை கேட்காமல் நடிக்க வந்துவிட்டேன். பிறகு வந்து கதையைக் கேட்டபோது அருமையான கதையாக இருந்தது" என்று தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE