பூமியைக்  காயப்படுத்தாதீர்கள்: ஆஷிமா நர்வால்

By செய்திப்பிரிவு

பூமியைக் காயப்படுத்தாதீர்கள் என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ஆஷிமா நர்வால் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்து வருபவர் ஆஷிமா நர்வால். அர்ஜுன், விஜய் ஆண்டனி நடித்த 'கொலைகாரன்' படத்தில் நாயகியாக நடித்தவர். தற்போது ஆரவ் நடித்து வரும் 'ராஜபீமா' படத்தில் நடித்து வருகிறார் ஆஷிமா.

ஹைதராபாத்தில் கடும் மழையால் வெள்ளம் உருவாகியுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் ஆஷிமா.

அந்தப் பதிவில் ஆஷிமா நர்வால் கூறியிருப்பதாவது:

"புகைபிடித்தல் உடல் நலத்திற்குத் தீங்கானது என்பார்கள். ஹைதராபாத் வீதிகளில் இப்போது நடமாடுவதும் அப்படியானதுதான். வெள்ளம் ஹைதராபாத்தைச் சுழற்றி அடித்திருக்கிறது. தாழ்வான பகுதிகள் எங்கும் தண்ணீர் சூழ்ந்திருக்கிறது. மரங்கள் அனைத்தும் கீழே வீழ்ந்து, வீதிகளை மறைத்திருக்கின்றன.

நாம் பூமித்தாயை நிறையக் காயப்படுத்திவிட்டோம். இப்போது பூமித்தாய் அதற்கெதிரான பலனைத் தருகிறாள். பூமியைக் காயப்படுத்தாதீர்கள். அப்படிச் செய்தால் நம்மைப் பன்மடங்கு பூமித்தாய் திருப்பித் தாக்குவாள். இது உலகின் மறுக்க முடியாத நியதி.

(பின்குறிப்பு - ஒரு படத்தின் கதாபாத்திரத்திற்காகப் போலியாக புகைபிடிக்கக் கற்றுக்கொண்ட எனது புகைப்படம் பரவியபோது, உங்களிடமிருந்து எத்தனை அதிர்ச்சியையும், எதிர்வினைகளையும் தந்தது.

ஆனால் பூமியைப் புகையால் கார், பைக், ஸ்கூட்டர், தொழிற்சாலைகள் என எல்லாவற்றாலும் எவ்வளவு காயப்படுத்துகிறோம். அது ஏன் நம்மில் யாருக்கும் அதிர்ச்சியைத் தருவதில்லை. உண்மையில் அதுதான் நம் அனைவருக்கும் அதிர்ச்சி தர வேண்டும். இனியேனும் பூமித்தாயை நேசித்துப் பாதுகாப்போம்).”

இவ்வாறு ஆஷிமா நர்வால் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE