‘தி வொயிட் டைகர்’ மிகவும் சக்திவாய்ந்த திரைப்படம் என்று நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.
இரானிய இயக்குநர் ரமின் பஹ்ரானி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி வொயிட் டைகர்’. இப்படத்தில் பிரியங்கா சோப்ரா, ராஜ்குமார் ராவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
2008 ஆம் ஆண்டு அரவிந்த் அடிகா எழுத்தில் வெளியாகி ‘புக்கர்’ பரிசு வென்ற ‘தி வொயிட் டைகர்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை ரமின் பஹ்ரானி உருவாக்கி வருகிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பிரியங்கா சோப்ரா, இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்துப் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
'' ‘தி வொயிட் டைகர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறேன். தி நியூயார்க் டைம்ஸ் இதழின் பெஸ்ட்செல்லர் மற்றும் புக்கர் விருது வென்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, இப்படத்தை ரமின் பஹ்ரானி தயாரித்து இயக்கியுள்ளார்.
இப்படத்தில் பல்ராம் ஹல்வாய் என்ற கதாபாத்திரத்தில் ஆதர்ஷ் கவுரவ் என்ற புதுமுக இளைஞர் நடிக்கிறார். நான் பணிபுரிந்ததில் மிகவும் திறமையான புதுமுகங்களில் இவரும் ஒருவர். இப்படி ஒரு குறிப்பிடத்தக்க நடிப்பைப் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டன.
இந்தியாவில் இருக்கும் சில திறமையான நடிகர்களில் ஒருவரான ராஜ்குமார் ராவ் இப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் மிகவும் சக்திவாய்ந்தது. இது உங்களுக்கு அசவுகரியத்தைத் தரும். மிக முக்கியமாக உங்களை மகிழ்விக்கவும் செய்யும்''.
இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.