விஷால் - ஆர்யா இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

By செய்திப்பிரிவு

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் - ஆர்யா இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

'நோட்டா' படத்துக்குப் பிறகு தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் ஆனந்த் ஷங்கர். இந்தக் கதையைக் கேட்டவுடன், விஷால் நடிக்க சம்மதம் தெரிவித்தார். அவருக்கு வில்லனாக நடிக்க ஆர்யாவும் சம்மதம் தெரிவிக்கவே, படத்தின் பணிகள் தொடங்கப்பட்டன.

இன்று (அக்டோபர் 16) முதல் ஹைதராபாத்தில் படப்பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் எஸ்.வினோத்குமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். தமிழில் 'லென்ஸ்', 'வெள்ளை யானை' மற்றும் 'திட்டம் இரண்டு' ஆகிய படங்களைத் தொடர்ந்து அந்நிறுவனம் தயாரிக்கும் 4-வது தமிழ்ப் படம் இதுவாகும்.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர் பணிபுரிந்து வருகிறார். நாயகியாக மிருணாளிணி நடிக்கவுள்ளார். இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக 'அவன் இவன்' படத்தின் விஷால் - ஆர்யா இருவரும் நாயகர்களாக இணைந்து நடித்தனர். அதேபோல் ஆர்யா தயாரித்து நடித்த 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படத்தில் கவுரவக் கதாபாத்திரத்தில் விஷால் நடித்திருந்தார். தற்போது விஷால் நாயகனாகவும், ஆர்யா எதிர் நாயகனாகவும் நடிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE