காதலுக்கு மட்டும் ஏன் வன்முறையைத் தீர்வாக எடுத்துக் கொள்கிறார்கள்? - 'ஐஸ்வர்யா முருகன்' இயக்குநர் பேட்டி

காதலுக்கு மட்டும் ஏன் வன்முறையைத் தீர்வாக எடுத்துக் கொள்கிறார்கள் என்று 'ஐஸ்வர்யா முருகன்' இயக்குநர் பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

'ரேணிகுண்டா', '18 வயசு', 'கருப்பன்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஆர்.பன்னீர்செல்வம். இதில் 'ரேணிகுண்டா' படம் மாபெரும் வரவேற்பு பெற்ற படமாகும். தற்போது 'ஐஸ்வர்யா முருகன்' என்ற புதிய படத்தை இயக்கி முடித்துள்ளார் ஆர்.பன்னீர்செல்வம்.

மாஸ்டர் பீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை அருண் பன்னீர்செல்வம், வித்யா பிள்ளை, ஹர்ஷ் லல்வானி ஜி, சாய் சங்கீத், குண்டு கார்த்திக், தீனா, ராஜா, சங்கீதா, ராஜன், தெய்வேந்திரன், நாகேந்திரன் என முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் அருண் ஜெனா, இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்திரா, எடிட்டராக ஜான் ஆபிரஹாம் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர்.

'ஐஸ்வர்யா முருகன்' படம் குறித்து இயக்குநர் பன்னீர்செல்வம் கூறியிருப்பதாவது:

"காதல் அழகானதுதான். இயல்பானதுதான். ஆனால், அந்தப் பூ எந்த சந்தர்ப்பத்தில் மலரும் என்பதை யாரும் கணிக்க முடியாது. அப்படி இருவர் இடையே மலரும் காதல் சில நேரம் இரு குடும்பத்தையும் இலைகளும் கிளைகளும் தாண்டி வேரோடும் ஆணிவேரோடும் அசைத்து நிலை குலைத்து விடுகிறது. ஒரு புன்னகை மலரும்போது ஒரு கண்ணீர்த்துளி அரும்ப வேண்டும் என்கிற நியதி எதுவுமில்லை. ஆனால் காதலில் அது நிகழ்கிறது. அப்படி ஒரு காதலின் வலி நிறைந்த பக்கங்களைச் சொல்வதுதான் 'ஐஸ்வர்யா முருகன்'.

அப்படி என்றால் இந்தப் படம் காதலுக்கு எதிரானது என்று கேட்கலாம். அப்படி இல்லை. காதலும் இயல்பானதுதான். அதை நாம் எடுத்துக் கொள்வதில்தான் சிக்கல் இருக்கிறது. அதை சம்பந்தப்பட்ட இரு குடும்பங்களும் எவ்வாறு எதிர்கொள்கின்றன? அதன் விளைவுகள் எப்படி இருக்கின்றன? என்பதையும் ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டும். இருவரும் சேர்ந்து விட்டதுடன் அந்தக் காதல் கதை முடிவதில்லை. அதன் பின்னான விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கின்றன.

தாங்கள் ஏதோ இழந்துவிட்டதாக இரண்டு குடும்பங்களும் பரிதவிக்கின்றன; தத்தளிக்கின்றன; கொந்தளிக்கின்றன. அதன் விளைவுகள் மூர்க்கமாக வன்முறையாக வெளிப்படுகின்றன. நம் சமுதாயத்தில் அதன் சாட்சி சொல்லும் காட்சிகளாக ரத்தமும் சதையுமாக எத்தனையோ சம்பவங்கள் காணப்படுகின்றன. எந்தப் பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு அல்ல. காதலுக்கு மட்டும் ஏன் அதை ஒரு தீர்வாக எடுத்துக் கொள்கிறார்கள்? என்று இந்தப் படம் கேள்வி கேட்கிறது. இப்படத்தின் நோக்கம் எந்தத் தீர்வையும் சொல்வதல்ல.

கலை என்பது கேள்விகள் கேட்பதும் சிந்திக்க வைப்பதும்தான் என்கிற வகையில் நானும் இந்தப் படத்தில் சில கேள்விகளை வைத்திருக்கிறேன். நல்ல நட்பு பற்றிய காட்சிகளும் படத்தில் உள்ளன. இப்படம் கதையையும் உணர்வுகளையும் மட்டும் நம்பி எடுக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ற புதுமுகங்களைப் பயன்படுத்தி இருக்கிறேன்.

படப்பிடிப்பை 45 நாட்கள் திண்டுக்கல், பழனி, மதுரை பகுதிகளில் ஒரே மூச்சில் நடத்தி முடித்திருக்கிறோம். மண்ணும் மக்களும் இயல்பாக இருக்க பெரும்பாலும் அசலான மண்ணின் மைந்தர்களைப் பயன்படுத்தி இருக்கிறோம். மதுரையில் நெரிசல் நிறைந்த தெருக்களில் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறோம். உணர்வு எங்கெங்கு தேடிச் செல்கிறதோ அதற்கு ஏற்றபடிதான் காட்சிகள் என்ற வகையில் எந்த சமரசமும் இல்லாமல் இடங்களைத் தேர்வு செய்து படப்பதிவு செய்திருக்கிறோம்.

இப்படத்தில் நடிகர்கள் என்று யாரும் இல்லை. அனைவரும் கதை மாந்தர்களாகவே தோன்றுவார்கள். கணேஷ் ராகவேந்திரா இசையில் யுகபாரதியின் வரிகளில் இப்படத்தில் 4 பாடல்கள் உள்ளன. படத்தைப் பார்த்துவிட்டு உணர்வுகளின் அசலான பதிவாக இருக்கிறது என்று பலரும் பாராட்டியிருக்கிறார்கள்".

இவ்வாறு இயக்குநர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE