டிசம்பர் முதல் நிறுத்தப்படும்  ஹெச்பிஓ சேனல் சேவை

டிசம்பர் முதல் ஹெச்பிஓ சேனல் சேவை நிறுத்தப்படவுள்ளதாக வார்னர் மீடியா அறிவித்துள்ளது.

தெற்காசியாவில் ஹெச்பிஓ மற்றும் வார்னர் பிரதர்ஸ் (WB) திரைப்பட சேனல்களின் செயல்பாட்டை டிசம்பர் 15-ம் தேதி முதல் நிறுத்துவதாக வார்னர் மீடியா எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அளிக்கப்பட்டிருக்கும் அறிக்கையில், "இது கடினமான முடிவு தான். கட்டண தொலைக்காட்சித் துறையின் தன்மையும், சந்தை இயங்கும் விதமும் பெரிய மாற்றம் கண்டுள்ளது. கோவிட்-19 நெருக்கடி, மாற்றத்துக்கான தேவையை இன்னும் அதிகரித்துள்ளது. ஹெச்பிஓ மற்றும் வார்னர் பிரதர்ஸ் சேனல்களை பிரபலப்படுத்திய அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.

இந்த சேனல்களில் உழைத்த ஊழியர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். வார்னர் மீடியாவுக்கு இந்தியாவில் ஆர்வம் அதிகமுள்ளது. இங்கிருக்கும் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்க சரியான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு சேனல்கள் நிறுத்தப்பட்டாலும் கார்ட்டூன் நெட்வர்க் மற்றும் போகோ ஆகிய சேனல்களில் தங்களது முதலீட்டை அதிகப்படுத்த வார்னர் மீடியா முடிவு செய்துள்ளது. எனவே இந்த குழந்தைகளுக்கான சேனல்களில், மும்பை, டெல்லி, பெங்களூரு ஆகிய நகரங்களில் ஏற்கெனவே இருக்கும் ஊழியர்கள் பணியாற்றுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE