'ஜகமே தந்திரம்' வெளியீடு தொடர்பாக கார்த்திக் சுப்புராஜ் பதிலளித்துள்ளார்.
'புத்தம் புதுக் காலை' என்கிற ஆந்தாலஜி திரைப்படம் நாளை (அக்டோபர் 16) அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகிறது. இதில் ராஜீவ் மேனன், சுஹாசினி மணிரத்னம், கெளதம் மேனன், சுதா கொங்கரா, கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் 5 கதைகளை இயக்கியுள்ளனர்.
இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் குறும்படம் பாபி சிம்ஹாவுக்கு நிஜமாக நடந்த அனுபவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சமயத்தில் பாபி சிம்ஹாவின் அலுவலகத்தில் நிஜமாகவே திருடு போக அதை வைத்துதான் கார்த்திக் சுப்புராஜ் இந்தக் கதையை உருவாக்கியுள்ளார். 'மிராக்கிள்' (அற்புதம்) என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தக் குறும்படத்தில் பாபி சிம்ஹா, முத்துக்குமார், ஷரத் ரவி, எழில் ஆகியோர் நடித்துள்ளனர்.
தனது 'ஜகமே தந்திரம்' வெளியீடு குறித்துப் பேசியிருக்கும் கார்த்திக் சுப்புராஜ், "அக்டோபர் மாத இறுதியில் திரையரங்குகள் திறக்கப்பட்டால் அது திரைத்துறைக்கு நல்ல செய்தி. 'ஜகமே தந்திரம்' வெளியீட்டைப் பொறுத்தவரை அது தயாரிப்பாளரின் கைகளில்தான் இருக்கிறது. நான் 'பெண்குயின்' திரைப்படத்தைத் தயாரித்தேன். திரையரங்குக்காக எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் அமேசானுக்கு விற்றோம். கையில் இருப்பதை வைத்து பிழைக்க வேண்டும் என்கிற நிலையில் நாங்கள் இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
» 'கே.ஜி.எஃப் 2' படப்பிடிப்பில் கலந்துகொள்வது எப்போது?- சஞ்சய் தத் பதில்
» மீண்டும் வெளியாகும் 'கேதர்நாத்': சுஷாந்தின் மரணத்தை வைத்துப் பணம் சம்பாதிப்பதாக ரசிகர்கள் வருத்தம்