'கே.ஜி.எஃப் 2' படப்பிடிப்பில் கலந்துகொள்வது எப்போது?- சஞ்சய் தத் பதில்

By செய்திப்பிரிவு

'கே.ஜி.எஃப் 2' படப்பிடிப்பில் கலந்துகொள்வது குறித்து சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 61 வயதான சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் வந்தன. இதுகுறித்து அவரது குடும்பத்தினர் தெரிவிக்கவில்லை என்றாலும் பாலிவுட் பத்திரிகையாளர் கோமல் நாட்டா இச்செய்தியை ட்விட்டரில் பகிர்ந்து, சஞ்சய் தத் வேகமாகக் குணம் பெற பிரார்த்தனை செய்வோம் என்று குறிப்பிட்டிருந்தார். அவர் மருத்துவச் சிகிச்சைக்காக வேலையிலிருந்து தற்காலிக ஓய்வு எடுத்துக்கொள்வதாக சில நாட்களுக்குப் பின் அறிவிக்கப்பட்டது.

சமீபத்தில் சஞ்சய் தத் மெலிந்து காணப்பட்ட ஒரு புகைப்படம் இணையத்தில் பரவியது. இது அவரது ரசிகர்கள் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தற்போது புற்றுநோய் குணமாக சிகிச்சை பெற்று வரும் சஞ்சய் தத், 'கே.ஜி.எஃப் 2' படக் கதாபாத்திரத்துக்கான சிகை அலங்காரம் செய்ய நட்சத்திர சலூனுக்குச் சென்றுள்ளார். இந்த சலூன் வீடியோவை, உரிமையாளர் ஆலிம் ஹகீம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவில் சலூன் குறித்துப் பேசியுள்ள சஞ்சய் தத், தனது நெற்றியில் இருக்கும் தழும்பைக் காட்டி, "உங்களுக்கு இது தெரிகிறதா, இதுதான் என் வாழ்க்கையில் சமீபத்திய தழும்பு. ஆனால், நான் இதை வெல்வேன். இந்தப் புற்றுநோயிலிருந்து விரைவில் மீண்டு வருவேன்" என்று கூறியுள்ளார்.

மேலும், "வீட்டை விட்டு வெளியே வருவது என்றுமே உற்சாகமாக இருக்கும். நான் 'கே.ஜி.எஃப் 2' படத்துக்காக இந்த தாடியை வளர்க்கிறேன். நாங்கள் நவம்பர் மாதம் படப்பிடிப்பை ஆரம்பிக்கிறோம். நாளை 'ஷம்ஷேரா' படத்துக்கான டப்பிங் உள்ளது. அது உற்சாகமாகப் போகும்" என்று சஞ்சய் தத் கூறியுள்ளார்.

கடைசியாக சஞ்சய் தத் நடிப்பில் 'சடக் 2' திரைப்படம் ஓடிடியில் வெளியானது. 'கே.ஜி.எஃப் 2' படத்தில் ஆதிரா என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்து வருகிறார். மேலும், யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பான 'ஷம்ஷேரா' படத்திலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் 'பூஜ் தி ப்ரைட் ஆஃப் இண்டியா' திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE