ரிச்சா சட்டாவிடம் பாயல் கோஷ் நிபந்தனையற்ற மன்னிப்பு

By செய்திப்பிரிவு

நடிகை ரிச்சா சட்டாவிடம் நடிகை பாயல் கோஷ் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுள்ளார். மும்பை உயர் நீதிமன்றம் இந்த மன்னிப்பை ஏற்பதாகத் தெரிவித்துள்ளது.

இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று நடிகை பாயல் கோஷ் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். மேலும் ரிச்சா சட்டா உள்ளிட்ட சில நடிகைகள் வாய்ப்புகளுக்காக அனுராகுடன் பாலியல் தொடர்பு வைத்துக் கொண்டதாகவும் பாயல் கோஷ் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் பேசியிருந்தார்.

இதைத் தொடர்ந்து தன்னைப் பற்றிய பொய்யான, அவதூறான விஷயங்கள் பேசியதற்காக பாயல் கோஷ், கமல் ஆர் கான் மற்றும் இந்த பேட்டியை ஒளிபரப்பிய ஏபிஎன் தெலுங்கு சேனல் மீது ரிச்சா மான நஷ்ட வழக்கினைத் தொடர்ந்தார். சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்ல நீதிமன்றம் நான்கு வாரங்கள் அவகாசம் கொடுத்திருந்தது.

தற்போது இந்த வழக்கில் தற்போது பாயல், தான் சொன்ன வார்த்தைகளைத் திரும்பப் பெறுவதாகவும், ரிச்சாவிடம் மன்னிப்பு கோருவதாகவும் கூறியுள்ளார்.

"ரிச்சா சட்டாவைப் பற்றிய அவதூறான கருத்துகளைத் திரும்பப்பெறுகிறார். ரிச்சாவிடன் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறார். மேலும் பாயல் ட்விட்டர் உள்ளிட்ட மற்ற ஊடகங்களில் இதுபற்றி தெரிவித்த கருத்துகளை நீக்க முடிவு செய்துள்ளார். மேற்கொண்டு ரிச்சா பற்றிய எந்தவொரு தவறான கருத்துகளைக் கூற மாட்டார்" என பாயல் கோஷின் வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். மும்பை உயர் நீதிமன்றம் இந்த மன்னிப்பை ஏற்பதாகத் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE