'தலைவி' படத்துக்காக 20 கிலோ அளவுக்கு உடல் எடையை அதிகரித்ததாக கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார்.
விஜய் இயக்கத்தில் கங்கணா ரணாவத், அரவிந்த்சாமி, மதுபாலா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தலைவி'. இந்தப் படம் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி மட்டுமே பாக்கியிருப்பதாகத் தெரிகிறது.
கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே சில நாட்களுக்கு முன்பு, ஹைதராபாத்தில் சில முக்கிய காட்சிகளை படமாக்கியது படக்குழு. இதனை கங்கணா ரணாவத் தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். இதில் சட்டமன்றத்தில் ஜெயலலிதா பேசும் சில முக்கிய காட்சிகளை படமாக்கியுள்ளார் இயக்குநர் விஜய்.
தற்போது, 'தலைவி' படத்துக்காக உடல் எடையை 20 கிலோ அதிகரித்ததாக கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கங்கணா ரணாவத் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"'தலைவி' படத்துக்காக 20 கிலோ எடை ஏற்றினேன். இப்போது படம் கிட்டத்தட்ட முடியும் நிலைக்கு வந்துவிட்டது. மீண்டும் எனது பழைய அளவு, வேகம், வளர்சிதை மாற்றம், நெகிழ்வுத் தன்மைக்குப் போக வேண்டும். சீக்கிரம் எழுந்து காலை நடைப்பயிற்சி / ஓட்டத்துக்குச் செல்கிறேன். யாரெல்லாம் என்னைப் போலச் செய்கிறீர்கள்?"
இவ்வாறு கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார்.
தற்போது 'தலைவி' படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்புக்காக காத்திருக்கிறது படக்குழு. ஏனென்றால் சட்டமன்றத்திலிருந்து ஜெயலலிதா வெளியே வருவது போலவும், அப்போது அவரைக் காண ஒரு பெரும் கூட்டமொன்று நிற்பது போலவும் காட்சிப்படுத்தப் படக்குழு திட்டமிட்டு இருப்பதாகத் தெரிகிறது. தற்போது கரோனா அச்சுறுத்தலால் இந்தக் காட்சியை எப்படி படமாக்குவது என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது படக்குழு.