சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய டொவினோ தாமஸ்

By செய்திப்பிரிவு

படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் டொவினோ தாமஸ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

ரோஹித் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நாயகனாக நடித்து வரும் மலையாளத் திரைப்படம் 'களா'. இந்தப் படத்துக்காக சண்டைக்காட்சி ஒன்றைப் படமாக்கினார்கள். அப்போது டொவினோ தாமஸுக்கு அடிவயிற்றில் காயம் ஏற்பட்டது.

இதனால் தனியார் மருத்துவமனையில் டொவினோ தாமஸ் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை நடைபெற்று வந்தது. தற்போது சிகிச்சை முடிந்த நிலையில், டொவினோ தாமஸ் வீடு திரும்பியுள்ளார்.

வீடு திரும்பிய தனக்காக, தனது குழந்தைகள் உருவாக்கிய ஒரு வாழ்த்து அட்டையை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டொவினோ பகிர்ந்துள்ளார். அத்துடன் டொவினோ தாமஸ் கூறியிருப்பதாவது:

"அனைவருக்கும் வீட்டிலிருந்து பெரிய வணக்கம். நான் மருத்துவமனையிலிருந்து திரும்பிவிட்டேன். வீட்டில் நலமாக உள்ளேன். கடந்த சில நாட்களாக உங்களின் வாழ்த்துகள், அக்கறைக்கு நன்றி. அனைவருக்கும் என் அன்பு. என்னை ஆதரித்த என் சக ஊழியர்கள், நண்பர்கள், குடும்பத்தினர், திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் அக்கறை காட்டிய அனைவருக்கும் நன்றி.

உங்கள் செய்திகளையும், அழைப்புகளையும் பார்த்து நான் மிகவும் நேர்மறையாக உணர்ந்தேன். இந்தச் சம்பவம், என்னை நான் இன்னும் சிறப்பாகப் பார்த்துக்கொள்ள வைக்கும் என நம்புகிறேன். விரைவில் மீண்டும் பணிக்குத் திரும்பி, நல்ல படங்களோடு உங்களுக்குப் பொழுதுபோக்க விரும்புகிறேன். அதுவரை உங்கள் அன்பை ரசித்து ஓய்வில் இருப்பேன்.

எனக்கு எவ்வளவு அன்பு கிடைக்கிறது என்பது இந்தக் காலகட்டத்தில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய புரிதல். அதை மனதில் வைத்திருக்கிறேன்".

இவ்வாறு டொவினோ தாமஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE