சவால் மிகுந்த கதாபாத்திரங்களுக்காகக் காத்திருக்கிறேன் என்று வினோத் சாகர் தெரிவித்துள்ளார்.
ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'ராட்சசன்'. 2018-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் பள்ளி ஆசிரியராக வில்லத்தனம் கலந்த முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வினோத் சாகர்.
அந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால், தற்போது கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 'இந்தியன் 2', அதர்வா நடித்து வரும் 'குருதியாட்டம்', அமீர் நடித்து வரும் 'நாற்காலி', 'பயமறியா பிரம்மை', அமலாபால் தயாரித்து வரும் 'கடாவர்' உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
மேலும், மலையாளத்தில் 'நாயாட்டு', ப்ரித்விராஜ் நடித்து வரும் 'ஜனகனமண' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். அதேபோல் மலையாளத்தில் நாயகனாக நடிப்பதற்கு சில வாய்ப்புகள் வந்துள்ளதாகக் கூறுகிறார் வினோத் சாகர்.
பல்வேறு படங்களில் நடித்து வந்தாலும், அவரிடம் லட்சியம் குறித்துக் கேட்டபோது, "பெரிய நாயகர்கள் படத்தில் மெயின் வில்லனாக நடிக்க வேண்டும். மேலும் சவால் மிகுந்த கதாபாத்திரங்களுக்காகக் காத்திருக்கிறேன்" என்று வினோத் சாகர் தெரிவித்துள்ளார்.