சினிமாவிலிருந்து அரசியலுக்குச் செல்லும் நடிகர்களைச் சாடியுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.
தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி முன்னணி நடிகர்களாக வலம் வந்த பலர் அரசியல் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எனத் தொடங்கி இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கும்.
நேற்று (அக்டோபர் 12) காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய பாஜகவில் இணைந்தார் குஷ்பு. இதனால், கடுமையான எதிர்வினைகளைச் சந்தித்தார். பலரும் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் போது அவர் ட்வீட் செய்தது, பேசியது என அனைத்தையும் எடுத்துப் பகிர்ந்து சாடியிருந்தார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பதிவில், "விமர்சிக்கிறோம் எனும் பெயரில் குஷ்பு மீது தனிநபர் தாக்குதல் செய்வது அரசியல் நாகரீகமல்ல" என்று தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து சினிமாவிலிருந்து அரசியலுக்குச் சென்றவர்கள் குறித்து சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"சினிமாவிற்கு நடிக்க வருகிறார்கள். சினிமா அவர்களை வாழ வைக்கிறது. ஆனால், ஒரு கட்டத்திற்குப் பிறகு மக்களைக் காக்கப் போகிறோம் எனப் புறப்பட்டுவிடுகிறார்கள். முதலில் உங்களை வாழவைத்த சினிமாவிற்கு ஏதாவது நல்லது பண்ணுங்க. அதையே செய்ய முடியாத நீங்கள்லாம்... மக்களுக்கு என்னத்த பண்ணப் போறீங்க?".
இவ்வாறு சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.