விஷால் - ஆர்யா இணைந்து நடிக்கும் படத்தின் நாயகியாக மிருணாளினி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வந்த படம் 'சக்ரா'. இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு அக்டோபர் 10-ம் தேதியுடன் முடிவடைந்து, வெளியீட்டுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்தப் படத்துக்குப் பிறகு ஆனந்த் ஷங்கர் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே, அதில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஷால். இதன் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் சென்னையில் படப்பூஜையுடன் தொடங்கவுள்ளது.
இதில் விஷாலுடன் ஆர்யாவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து முடித்துவிட்டு, ஆனந்த் ஷங்கர் படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் ஆர்யா.
» கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது: மாதவன்
» 'அந்தாதூன்' தமிழ் ரீமேக்: மோகன் ராஜா விலகல்; இயக்குநராகும் ஜே.ஜே.பிரட்ரிக்?
இதில் நாயகியாக நடிக்க மிருணாளினி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். டப்ஸ்மாஷ் செயலி மூலம் மிகவும் பிரபலமான மிருணாளினி, தற்போது திரையுலகில் நாயகியாக நடிக்கத் தொடங்கியுள்ளார். சசிகுமார் நாயகனாக நடித்துள்ள 'எம்.ஜி.ஆர் மகன்' படத்தில் நாயகியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வினோத் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் படமாக்க முடிவு செய்துள்ளது படக்குழு. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.