'அந்தாதூன்' தமிழ் ரீமேக்கின் இயக்குநர் பொறுப்பிலிருந்து மோகன் ராஜா விலகியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அந்தாதூன்'. 2018-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதுகளையும் வென்றது.
இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றி தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கவுள்ளார். முதலில் இயக்குநராக மோகன் ராஜா ஒப்பந்தமானார். ஸ்ரீராம் ராகவனை சந்தித்துப் பேசிய புகைப்படங்கள் எல்லாம் வெளியாகின.
தற்போது 'அந்தாதூன்' தமிழ் ரீமேக் இயக்குநர் பொறுப்பிலிருந்து மோகன் ராஜா விலகியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மோகன் ராஜாவுக்குப் பதிலாக 'பொன்மகள் வந்தாள்' இயக்குநர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கவுள்ளதாகத் தெரிகிறது.
» என் பந்துவீச்சு முறையை விஜய் சேதுபதி சிறப்பாகச் செய்து காட்டுவார்: முத்தையா முரளிதரன் நம்பிக்கை
» சினேகா பிறந்த நாள் ஸ்பெஷல்: என்றென்றும் ஈர்க்கும் புன்னகை அரசி
'பொன்மகள் வந்தாள்' படத்தை இயக்கிய விதம் தியாகராஜனுக்கு மிகவும் பிடித்திருந்ததால் அவரை இயக்கச் சொல்லிக் கேட்டுள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. 'அந்தாதூன்' படத்தின் முதற்கட்டப் பணிகளை நீண்டகாலமாக கவனித்து வந்தவர் மோகன் ராஜா. அவருடைய விலகல் என்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
'அந்தாதூன்' தமிழ் ரீமேக்கில் பிரசாந்துடன் கார்த்திக், யோகி பாபு உள்ளிட்ட பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். தபு கேரக்டரில் யார் நடிக்கவுள்ளார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை. இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிவார் எனத் தெரிகிறது.