உங்களுடைய அன்புதான் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு: ரசிகர்களுக்கு அமிதாப் நன்றி

தனக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்த ரசிகர்களுக்கு நடிகர் அமிதாப் பச்சன் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியத் திரையுலகின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன் தனது 78-வது பிறந்த நாளை நேற்று (அக்டோபர் 12) கொண்டாடினார்.

அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு, முன்னணித் திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களுடைய சமூக வலைதளத்தில் வாழ்த்துத் தெரிவித்து வந்தனர். இதனால் #HappyBirthdayAmitabhBachchan, #HappyBirthdayBigB உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் இந்திய அளவில் ட்ரெண்டாகின.

இந்நிலையில் தனது பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்த ரசிகர்களுக்கு அமிதாப் பச்சன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமிதாப் பச்சன் கூறியுள்ளதாவது:

“உங்கள் தாராள மனமும் அன்பும்தான் என்னுடைய பிறந்த நாளில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசுகள். இதைவிட வேறென்ன வேண்டும்”.

இவ்வாறு அமிதாப் கூறியுள்ளார்.

இத்துடன் இந்தி, ஆங்கிலம், உள்ளிட்ட உலகின் மொழிகளில் ‘நன்றி’ என்று எழுதப்பட்ட ஒரு படத்தையும் அமிதாப் பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ள படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க அமிதாப் பச்சன் ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE