சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'மாநாடு' படத்துக்கு முன்பாகவே, சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இதன் படப்பிடிப்பில் நேற்று (அக்டோபர் 10) முதல் கலந்து கொண்டுள்ளார். இந்தப் படத்தை முதலில் சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. தற்போது அதிலும் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
இந்தப் படத்தை மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்து வருகிறது. இதற்கு முன் 'ஜீரோ' மற்றும் 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தை இந்நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது 'ஓ மணப்பெண்ணே' மற்றும் சசி - ஹரிஷ் கல்யாண் இணையும் படத்தையும் தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் 5-வது தயாரிப்பாக சிம்பு - சுசீந்திரன் படம் அமைந்துள்ளது.
இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாமலே படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. முதன்முறையாக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
» சூரஜ் பர்ஜாத்யா, அனுராக் காஷ்யப் இருவரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்: பாயல் கோஷ்
» ஃபகத் பாசிலின் புதிய காரால் உருவான சர்ச்சை: நடிகை அஹானா பதிலடி
ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக எஸ்.எஸ்.தமன், எடிட்டராக ஆண்டனி, தயாரிப்பு வடிவமைப்பாளராக ராஜீவன், பாடலாசிரியராக யுகபாரதி ஆகியோர் பணிபுரிகிறார்கள்.
சென்டிமென்ட், எமோஷன், காதல், ஆக்ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக இது உருவாகிறது. இதில் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு முடிவு செய்து மும்முரமாகப் பணிபுரிந்து வருகிறது. 2021-ம் ஆண்டு இந்தப் படம் வெளியாகவுள்ளது.