கரோனா நோயாளிகளுக்காக நர்ஸாக மாறி சேவையாற்றி வந்த பாலிவுட் நடிகை ஷிகா மல்ஹோத்ராவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தனது உடல்நிலை குறித்து நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகையான ஷிகா மல்ஹோத்ரா கரோனா தொற்று தீவிரமாகப் பரவிக் கொண்டிருந்தபோது பாதிக்கப்பட்ட மக்களுக்காக மும்பையில் உள்ள மருத்துவமனையில் நர்ஸ் வேலையில் சேர்ந்து பணியாற்றினார். இந்தச் செய்தி இணையத்தில் வைரலானது. பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் ஷிகாவுக்குப் பாராட்டுத் தெரிவித்தனர்.
இந்தச் சூழலில் கடந்த சில தினங்களுக்கு ஷிகா மல்ஹோத்ராவுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தனது உடல்நிலை குறித்த நீண்ட பதிவொன்றை ஷிகா மல்ஹோத்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
» பாலிவுட் மாஃபியா கும்பல் என்னைக் கொலை செய்து தற்கொலை என்று நிரூபிக்கும்: பாயல் கோஷ் புகார்
» விவசாயிகளை தீவிரவாதி என விமர்சித்த நடிகை கங்கனா ரனாவத் மீது வழக்கு
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''என்னுடைய ரசிகர்களிடமிருந்து எனக்குக் கிடைத்த அன்பையும், மரியாதையையும் கண்டு திக்குமுக்காடிப் போயுள்ளேன். எனக்காக கவலைப்பட்ட உங்களுக்காகவே இந்தப் பதிவு. டெல்லியில் இருக்கும் என் பெற்றோரும் என்னைப் பற்றிய கவலையில் உள்ளனர்.
தற்போது நான் ஆக்ஸிஜன் உதவியுடன் சுவாசிக்கிறேன். நீர்ச்சத்தும் குறைவாக உள்ளது. கூடவே நெஞ்சு வலியும் உள்ளது. என் குடும்பத்தில் யாருக்கும் சர்க்கரை வியாதி இல்லாத போதிலும் என்னுடைய சர்க்கை அளவு குறைந்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக எனக்கு மயக்கம் வருகிறது.
ஆனாலும், இதிலிருந்து மீள்வேன் என்று நான் உறுதியாக நம்புகிறேன். கரோனா என்பதே ஒரு பொய், அது ஒரு பொய்ப் பிரச்சாரம் என்று கூறும் மக்களுக்கு, நீங்கள் கரோனா போராளியாக ஆகவில்லையென்றாலும் பரவாயில்லை, கரோனாவைச் சுமப்பவர்களாக மாறிவிடாதீர்கள்''.
இவ்வாறு ஷிகா மல்ஹோத்ரா கூறியுள்ளார்.