பாலிவுட் மாஃபியா கும்பல் என்னைக் கொலை செய்து தற்கொலை என்று நிரூபிக்கும்: பாயல் கோஷ் புகார்

By செய்திப்பிரிவு

பாலிவுட் மாஃபியா கும்பல் என்னைக் கொலை செய்து தற்கொலை செய்து கொண்டதாக நிரூபிக்கும் என்று நடிகை பாயல் கோஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என நடிகை பாயல் கோஷ் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாக திரைத்துறையினரும் அவரது முன்னாள் மனைவிகளும் குரல் கொடுத்தாலும் பாயல் கோஷ் தனது நிலையில் தீர்மானமாக இருந்து வருகிறார்.

இதுகுறித்துக் காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக தனக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு கோரி மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியைப் பாயல் சந்தித்துப் பேசினார்.

சுஷாந்த், ரியா விவகாரத்துக்குப் பிறகு இந்தக் குற்றச்சாட்டு பாலிவுட் வட்டாரத்தில் தொடர்ந்து சர்ச்சையாகி வருகிறது.

அக்.6 ஆம் தேதியன்று தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா ஷர்மாவைச் சந்தித்தார் பாயல் கோஷ். இது தொடர்பான புகைப்படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அத்துடன் அனுராக் விவகாரத்தில் தனக்கு உறுதுணையாக நிற்கும் தேசிய மகளிர் ஆணையத்துக்கு நன்றி என்றும் அதில் பதிவிட்டிருந்தார்.

பாயல் கோஷின் இந்தப் பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த நடிகை ரிச்சா சட்டா, ''இந்தப் புகைப்படங்களை பார்த்தேன். பாயல் கோஷ் மீது நான் அளித்த புகார் குறித்து எனக்கு இதுவரை எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லையே?'' என்று தேசிய மகளிர் ஆணையத்திடம் கேள்வியெழுப்பியிருந்தார்.

இந்நிலையில் இதற்குப் பதிலளித்துள்ள பாயல் கோஷ் கூறியிருப்பதாவது:

“உண்மை வெளிவரும் வரை நான் உங்கள் பெயரைத் தவறாகப் பயன்படுத்தினேன் என்று உங்களுக்கு எப்படித் தெரியும் சட்டா? காஷ்யப் குறித்து உங்களுக்கு எப்படி இவ்வளவு உறுதியாகத் தெரிகிறது என்று எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. இந்த மொத்த கும்பலும் எப்படி என்னை அடக்கி அவமானப்படுத்த முயல்கிறது என்பதை தயவுசெய்து பாருங்கள் ரேகா ஷர்மா. இந்த மாஃபியா கும்பல் என்னைக் கொலை செய்து என்னுடைய மரணம் தற்கொலை என்று நிரூபிப்பார்கள்”.

இவ்வாறு பாயல் கோஷ் கூறியுள்ளார்.

இந்த ட்வீட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் ஐடியையும் அவர் இணைத்துள்ளார்.

முன்னதாக, தனது குற்றச்சாட்டில் ரிச்சா சட்டா உள்ளிட்ட அனுராக் காஷ்யப் படங்களில் நடித்த நடிகைகளின் பெயரையும் பயன்படுத்தியிருந்தார் பாயல்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE