ரியா தனது வாழ்க்கையைக் கசப்புடன் எதிர்கொள்ளக் கூடாது: டாப்ஸி

By செய்திப்பிரிவு

இனி ரியா, தனது வாழ்க்கையைக் கசப்புடன் எதிர்கொள்ளக் கூடாது என்று டாப்ஸி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை வைத்துப் பல்வேறு சர்ச்சைகள் உருவாகியுள்ளன. அவர் மரணத்தில் போதை மருந்து சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போதை மருந்து தடுப்புப் பிரிவு நடத்திய விசாரணையில் 20 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் சுஷாந்தின் காதலி ரியா உள்ளிட்ட ஐவரும் அடக்கம்.

ரியா சக்ரவர்த்தி உள்ளிட்ட பலரும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர். ஆனால், அவருடைய ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு வந்தது. மேலும், ரியாவுக்கு ஆதரவாக பாலிவுட்டில் பலரும் குரல் கொடுக்கத் தொடங்கினார்கள்.

இதனிடையே, நேற்று (அக்டோபர் 7) ரியாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ரியா அடுத்த 10 நாட்களுக்கு அவர் பகுதியில் இருக்கும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். போதை மருந்து தடுப்புப் பிரிவிடம் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைப்பதோடு அவர்களிடம் சொல்லாமல் மும்பையை விட்டுச் செல்லக் கூடாது ஆகிய நிபந்தனைகளையும் மும்பை உயர் நீதிமன்றம் விதித்துள்ளது.

ரியாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, டாப்ஸி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"ரியா ஜெயிலில் இருந்த காலம், வெளியே சுஷாந்துக்கு நீதி கேட்கிறோம் என்ற பெயரில் தங்கள் தனிப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்டவர்களின் ஈகோவுக்குப் போதுமானதாக இருக்கும் என்று நம்புகிறேன். இனி ரியா, தனது வாழ்க்கையைக் கசப்புடன் எதிர்கொள்ளக் கூடாது என்று பிரார்த்திக்கிறேன். வாழ்க்கை நியாயமற்றதுதான். ஆனால், அது இன்னும் முடிந்து விடவில்லை."

இவ்வாறு டாப்ஸி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE