ரியாவுக்கு ஜாமீன்: ஊடகங்களைச் சாடிய ஃபர்ஹான் அக்தர் 

ரியாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, ஊடகங்களைக் கடுமையாகச் சாடியுள்ளார் ஃபர்ஹான் அக்தர்.

நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை வைத்துப் பல்வேறு சர்ச்சைகள் உருவாகியுள்ளன. சுஷாந்த் சிங் மரணத்தில் போதை மருந்து சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போதை மருந்து தடுப்புப் பிரிவு நடத்திய விசாரணையில் 20 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் சுஷாந்தின் காதலி ரியா உள்ளிட்ட ஐவரும் அடக்கம்.

ரியா சக்ரவர்த்தி உள்ளிட்ட பலரும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் அவருடைய ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு வந்தது. மேலும், ரியாவுக்கு ஆதரவாக பாலிவுட்டில் பலரும் குரல் கொடுக்கத் தொடங்கினார்கள்.

இதனிடையே, நேற்று (அக்டோபர் 7) ரியாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ரியா அடுத்த 10 நாட்களுக்கு அவர் பகுதியில் இருக்கும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். போதை மருந்து தடுப்புப் பிரிவிடம் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைப்பதோடு அவர்களிடம் சொல்லாமல் மும்பையை விட்டுச் செல்லக் கூடாது ஆகிய நிபந்தனைகளையும் மும்பை உயர் நீதிமன்றம் விதித்துள்ளது.

ரியாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, ஃபர்ஹான் அக்தர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"இவ்வளவு நாள் அலறிய தொகுப்பாளர்கள் யாரேனும் ரியா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட இந்த நிலைக்காக மன்னிப்புக் கேட்டார்களா? அப்படி எனக்குத் தெரியவில்லை. ஆனால் இப்போது அவர்கள் விஷயத்தை அப்படியே மாற்றுவதைப் பாருங்கள். அவர்களுக்கு அது கை வந்த கலை".

இவ்வாறு ஃபர்ஹான் அக்தர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE