மகேஷ் பாபுவின் ட்வீட்டை வைத்துப் பார்த்தால், மீண்டும் த்ரிவிக்ரமுடன் கூட்டணி அமைப்பார் எனத் தெரிகிறது.
தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. அதேபோல் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் த்ரிவிக்ரம். இருவரும் இணைந்து 'அத்தடு' மற்றும் 'கலேஜா' ஆகிய படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளனர்.
2010-ம் ஆண்டு வெளியான 'கலேஜா' படத்துக்குப் பிறகு மகேஷ் பாபு - த்ரிவிக்ரம் இருவரும் இணைந்து பணிபுரியவே இல்லை. அவ்வப்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும், எதுவுமே அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை.
இன்று (அக்டோபர் 7) 'கலேஜா' திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு மகேஷ் பாபு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
" 'கலேஜா' வெளியாகி 10 வருடங்கள். ஒரு நடிகனாக என்னை நானே புதுப்பித்துக்கொண்டேன். என்றும் விசேஷமான படமாக இருக்கும். அனைத்துக்கும் காரணமான என் நல்ல நண்பர், திறமைசாலி த்ரிவிக்ரமுக்கு நன்றி. எங்கள் அடுத்த திரைப்படத்தை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன். விரைவில் நடக்கும்".
இவ்வாறு மகேஷ் பாபு தெரிவித்துள்ளார்.