அக்.8 முதல் 'கே.ஜி.எஃப் 2' இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடக்கம்

By செய்திப்பிரிவு

அக்டோபர் 8-ம் தேதி முதல் 'கே.ஜி.எஃப் 2' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்குகிறது.

2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான கன்னடப் படம் 'கே.ஜி.எஃப்'. யாஷ் நாயகனாக நடித்திருந்த இந்தப் படம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு, வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இதர மொழிகளிலும் இப்படம் டப்பிங் செய்யப்பட்டது.

பிரஷாந்த் நீல் இயக்கியிருந்த இந்தப் படத்தின் கதை முதல் பாகத்துடன் முடிவடையவில்லை. 'கே.ஜி.எஃப் 2' தயாரிப்பில் இருக்கிறது. இதில் சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ்ராஜ் ஆகிய கதாபாத்திரங்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுப் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. கரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு தடைப்பட்டது.

பிரதான காட்சிகள் அனைத்துமே படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டது. இதனால், இறுதிக்கட்டப் படப்பிடிப்பு எப்போது என்ற கேள்வி எழுந்தது. ஆகஸ்ட் 26-ம் தேதி பெங்களூருவில் பிரகாஷ்ராஜ் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பை படக்குழு தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து யாஷ் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது 'கே.ஜி.எஃப் 2' படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளரான கார்த்திக் கவுடா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

" 'கே.ஜி.எஃப் 2' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் நாளை முதல் யாஷ் பங்கேற்கவுள்ளார். இந்த மாத இறுதிக்குள் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்து, வெளியீட்டுப் பணிகளைக் கவனிக்கவுள்ளோம்".

இவ்வாறு கார்த்திக் கவுடா தெரிவித்துள்ளார்.

தற்போது சஞ்சய் தத் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை எடுத்து வருகிறார். அவர் சம்பந்தப்பட்ட சில காட்சிகளின் படப்பிடிப்பு எப்போது என்பதைப் படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE