திருமணம் தொடர்பாக வதந்தி: சீனு ராமசாமி விளக்கம்

By செய்திப்பிரிவு

தனது திருமணம் தொடர்பாக உருவான வதந்திக்கு இயக்குநர் சீனு ராமசாமி விளக்கம் அளித்துள்ளார்.

'கூடல் நகர்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. அதனைத் தொடர்ந்து 'தென்மேற்குப் பருவக்காற்று', 'நீர்ப்பறவை', 'தர்மதுரை', 'கண்ணே கலைமானே' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அவருடைய இயக்கத்தில் உருவான 'மாமனிதன்' மற்றும் 'இடம் பொருள் ஏவல்' ஆகிய படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளன.

தற்போது தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார் சீனு ராமசாமி. இதனிடையே, அவருடைய அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று (அக்டோபர் 7) காலை 'Got Married' என்று மாற்றப்பட்டு இருந்தது. இதனால் சீனு ராமசாமி திருமணம் செய்து கொண்டார் எனத் தகவல் பரவியது.

இது தொடர்பாக சீனு ராமசாமி தனது ட்விட்டர் பதிவில், "இது தவறான தகவல். எனக்கு 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து எனது மனைவி, மகள்களுடன் மகிழ்வாக வாழ்ந்து வருகிறேன். அப்டேட் டவுன்லோடு செய்ததில் ஏற்பட்ட பிழைக்கு வருந்துகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், காலையில் ஃபேஸ்புக் பார்த்துக் கொண்டிருக்கும்போது தவறுதலாக மாற்றப்பட்டுவிட்டதாக அவருடைய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE