‘இன்னும் சிறப்பாக்குங்கள்’ - அடுத்த ஜேம்ஸ் பாண்டுக்கு டேனியல் க்ரெய்க் அறிவுரை

அடுத்த ஜேம்ஸ் பாண்டாக நடிக்கவுள்ளர்கள் அந்தக் கதாபாத்திரத்தை இன்னும் சிறப்பாக்குங்கள் என்று டேனியல் க்ரெய்க் அறிவுரை கூறியுள்ளார்.

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற தொடர் வரிசைத் திரைப்படங்களில் ஒன்று ஜேம்ஸ் பாண்ட் திரை வரிசை. 60களில் ஆரம்பித்த ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள், தலைமுறைகளைக் கடந்து இன்றுவரை ரசிகர் கூட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன. இதுவரை 24 ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதில் ஷான் கானரி, ஜார்ஜ் லேஸன்பை, ராஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் ப்ராஸ்னன் ஆகிய நடிகர்கள் நாயகன் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில், அந்தந்தக் காலகட்டத்தில் நடித்துள்ளனர்.

தற்போது டேனியல் க்ரெய்க் ஜேம்ஸ் பாண்டாக நடித்து வருகிறார். 'கேஸினோ ராயல்', 'குவாண்டம் ஆஃப் சோலேஸ்', 'ஸ்கைஃபால்', 'ஸ்பெக்டர்' ஆகிய 4 பாண்ட் திரைப்படங்களில் டேனியல் கிரெய்க் நடித்திருக்கிறார். அடுத்து வெளியாகவுள்ள 'நோ டைம் டு டை' திரைப்படத்திலும் டேனியல் க்ரெய்க்தான் ஜேம்ஸ் பாண்ட். ஆனால், இதன் பிறகு இந்தக் கதாபாத்திரத்தில் தான் தொடர விரும்பவில்லை என்பதை டேனியல் க்ரெய்க் ஏற்கெனவே அறிவித்துவிட்டார்.

அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகராக யார் தேர்வு செய்யப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு கடந்த சில மாதங்களாகவே ரசிகர்களிடம் இருந்து வந்தது. நடிகர் இத்ரிஸ் எல்பா, நடிகை லஷானா லின்ச், நடிகர் டாம் ஹார்டி உள்ளிட்ட பல பெயர்கள் அடிபட்டாலும் இன்னும் அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் டேனியல் க்ரெய்க் அளித்த பேட்டியில் அடுத்த ஜேம்ஸ் பாண்டுக்கு தனது அறிவுரையைக் கூறியுள்ளார். அந்தப் பேட்டியில் இதுகுறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ''ஜேம்ஸ் பாண்ட் பாத்திரம் அழகானது, அற்புதமானது. அதை இன்னும் சிறப்பாக்குங்கள்'' என்றார்.

'நோ டைம் டு டை' திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE