இந்தியாவில் கோவிட்-19 நெருக்கடி ஆரம்பித்த காலகட்டத்திலிருந்து பல்வேறு உதவிகளைச் செய்து வந்திருக்கும் நடிகர் சோனு சூட் தற்போது ஒரு கிராமத்தில் மொபைல் டவர் அமைத்து உதவியுள்ளார்.
ஊரடங்கு காலத்தில் வெளி மாநிலங்களில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை நடிகர் சோனு சூட் இலவசமாக ஏற்பாடு செய்து தந்தார். பேருந்து மட்டுமின்றி, சிலரைத் தனி விமானம் மூலமாகவும் அவரவர் ஊருக்கு அனுப்பி வைத்தார்.
வறுமையில் வாடிய விவசாயிக்கு டிராக்டர், ஸ்பெயினில் சிக்கியிருந்த சென்னை மாணவர்கள் வீடு திரும்ப விமான வசதி எனத் தொடர்ந்து பல்வேறு உதவிகளை சோனு சூட் செய்து வந்தார். சமீபத்தில் பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க புதிய திட்டத்தையும் தொடங்கினார். மேலும் சமீபத்தில் சண்டிகர் அரசுப் பள்ளி மாணவர்கள் இணைய வகுப்புகளைக் கவனிக்க, அவர்களுக்கு ஸ்மார்ட்போன்களை அளித்து உதவி செய்தார்.
தற்போது ஒரு கிராமத்தில் மொபைல் இணைப்பு சரியாக இல்லாமல் கஷ்டப்பட்ட மாணவர்களுக்காக மொபைல் டவர் ஒன்றை அமைத்துள்ளார் சோனு சூட்.
ஹரியாணாவில் உள்ள டபனா என்கிற கிராமத்தில், இணைய வகுப்புகளைக் கவனிக்கும் மாணவர்களுக்குச் சரியான மொபைல் சிக்னல் கிடைப்பதில்லை. இந்நிலையில் மரத்தின் மீது உட்கார்ந்து அந்தக் கிராமத்துச் சிறுமி பாடங்களைக் கவனிப்பது போன்ற ஒரு காணொலி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. நடிகர் சோனு சூட்டின் பெயரைக் குறிப்பிட்டு பகிரப்பட்ட இந்தக் காணொலியைப் பார்த்த அவர், அந்தக் கிராமத்தில் மொபைல் டவர் அமைத்து உதவி செய்துள்ளார்.
"நம் தேசத்தின் எதிர்காலம் குழந்தைகள்தான். எல்லோரையும் போல அவர்களும் சிறப்பான எதிர்காலத்துக்கு உரியவர்கள். யாரும் தங்களுடைய முழுத் திறனை அடைய இதுபோன்ற விஷயங்களைத் தடுக்கக் கூடாது என்று நான் நம்புகிறேன். இந்தக் குழந்தைகள் இணைய வகுப்புகளைக் கவனிக்க கிராமத்தில் மொபைல் டவர் அமைத்தது எனக்குக் கிடைத்த கவுரவம். இனி அவர்கள் யாரும் சிக்னல் கிடைக்க மரத்தின் மீது ஏறத் தேவையில்லை" என்று சோனு சூட் கூறியுள்ளார்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சோனு சூட் செய்த உதவிக்கு ‘சிறந்த மனிதநேயச் செயற்பாட்டாளர்’ விருது வழங்கி ஐ.நா. சபை கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.