தமன்னாவுக்கு கரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி 

நடிகை தமன்னாவுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. தமிழில் ‘கேடி’ படத்தின் மூலம் அறிமுகமாகி விஜய், அஜித், சூர்யா, விக்ரம், உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ளார். ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ திரைப்படம் இவரை இந்தியா முழுவதும் பிரபலமாக்கியது. இந்தியில் அஜய் தேவ்கனுடன் ‘ஹிம்மத்வாலா’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தனது பெற்றோர் இருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அதிர்ஷ்டவசமாக தனக்குக் கரோனா தொற்று இல்லை என்றும் தமன்னா சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று (04.10.20) தமன்னாவுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வெப் சீரிஸ் ஒன்றின் படப்பிடிப்புக்காக ஹைதரபாத்தில் இருந்த அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மருத்துவமனை சென்று பரிசோதித்ததில் தமன்னாவுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் ஹைதரபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தமன்னாவின் ரசிகர்கள் பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் அவர் விரைவில் குணமடைய வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

வழக்கமாக தன்னைப் பற்றிய செய்திகளை தனது சமூக வலைதளப் பக்கங்களில் உடனுக்குடன் பதிவிடும் தமன்னா, தனக்குத் தொற்று ஏற்பட்டது குறித்து இதுவரை பதிவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE