சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் தலைவர் யார்? - உருவானது புதிய சர்ச்சை

By செய்திப்பிரிவு

சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் தலைவர் யார் என்பதில் சர்ச்சை உருவாகியுள்ளது.

சின்னத்திரையில் நடித்து வரும் நடிகர்களுக்காகத் தனியாக சின்னத்திரை நடிகர் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 2000 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்தச் சங்கத்தின் தலைவராக ரவிவர்மா செயலாற்றி வருகிறார். இவருக்கு சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது.

சில தினங்களுக்கு முன்பு மனோபாலா தலைமையில் பத்திரிகையாளர்களை சின்னத்திரை நடிகர்கள் சந்தித்தார்கள். அப்போது செயற்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் ரவிவர்மாவுக்கு எதிராக இருப்பதால், அவரை தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டதாக தெரிவித்தார்கள். மேலும், அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்கள்.

இதனிடையே, நேற்று (அக்டோபர் 3) சின்னத்திரை சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் ஒருமனதாக மனோபாலா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் திரையுலகினர் மற்றும் சின்னத்திரை நடிகர்கள் பலரும் மனோபாலாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

தற்போது சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் ரவிவர்மா "என்னை தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கு பொதுக் குழுவுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது. தனிப்பட்ட முறையில் பதவி நீக்கம் செய்வது செல்லாது. அதனால் நானே தலைவராக நீடிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதனால், சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் தலைவர் யார் என்பதில் சர்ச்சை வெடித்துள்ளது. மேலும், தனது தரப்பு விஷயங்களைத் தெரிவிக்கப் பத்திரிகையாளர்களை நாளை (அக்டோபர் 5) சந்திக்கவுள்ளார் ரவிவர்மா.

மேலும், சின்னத்திரை நடிகர்கள் சார்பில் மலேசியாவில் கலைநிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் வந்த தொகையில் கையாடல் நடைபெற்றுள்ளது. சங்க உறுப்பினர்களுக்கு எதுவுமே உதவியாக வரவில்லை என்ற விவகாரமே ரவிவர்மாவுக்கு எதிராகத் திரும்பியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE