2 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் '96' மாயாஜாலம் இன்னும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது: த்ரிஷா உற்சாகம்

இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்த '96' மாயாஜாலம் இன்னும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று த்ரிஷா உற்சாகமாகத் தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘96’. ஒளிப்பதிவாளரான சி.பிரேம் குமார், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 2018-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி வெளியான இந்தப் படத்தை நந்தகோபால் தயாரித்திருந்தார். லலித் குமார் இதன் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றி வெளியிட்டார்.

கோவிந்த் வசந்தா இசையமைப்பில் வெளியான இந்தப் படத்தின் பாடல்கள் இப்போது வரை கொண்டாடப்பட்டு வருகின்றன. படத்தைப் பார்த்த அனைவருமே கொண்டாடித் தீர்த்தனர். பலரின் பள்ளிக்கால காதல் நினைவுகளை இந்தப் படம் கிளறிவிட்டது என்று சொல்லலாம்.

இன்று (அக்டோபர் 4) '96' திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இதனை படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுக் கொண்டாடி வருகிறார்கள். இந்தப் படம் குறித்து த்ரிஷா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்த மாயாஜாலம் இன்னும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நடிகர்களாக நாங்கள் பாக்ஸ் ஆபீஸ் வெற்றிகளையும், தோல்விகளையும் சந்தித்துள்ளோம், ஆனால் நாம் நடிக்கும் ஒரு கதாபாத்திரம் கொண்டாடப்படுவதும், குடும்பத்தில் பெயராக வைக்கப்படுவதையும், மீம்கள், ட்ரெண்ட்கள், போன்றவையாக இருப்பதும் எங்களால் எளிதில் கடந்து செல்ல இயலாதது. இதைச் சாத்தியமாக்கிய உங்கள் அனைவருக்கும் நன்றி"

இவ்வாறு த்ரிஷா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE