கரோனா அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள நஷ்டத்துக்கு, தெலுங்கு நடிகர்கள் 20% சம்பளக் குறைப்பு ஒப்புதல் அளித்துள்ளனர்.
இந்தியாவில் கரோனா அச்சுறுத்தலால் சுமார் 150 நாட்களுக்கும் மேலாக எந்தவொரு படப்பிடிப்பும் நடைபெறவில்லை, புதிய படங்கள் உள்ளிட்ட எதுவுமே வெளியாகவில்லை. இதனால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்புதான் மத்திய அரசு படப்பிடிப்புக்கு அனுமதியளித்தது. இதனைத் தொடர்ந்து சில படங்களின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டாலும், கரோனா அச்சுறுத்தலால் முன்னணி நடிகர்கள் படங்களின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. மேலும், அக்டோபர் 15-ம் தேதி முதல் திரையரங்குகளைத் திறக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
தற்போது தெலுங்கு திரையுலகின் தயாரிப்பாளர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தைச் சரி செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனை முடிவுகள் அனைத்தையும் நடிகர்கள் சங்கத்துடன் பேசி அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, நடிகர்கள் தங்களுடைய சம்பளத்தை 20% குறைத்துக் கொள்ளச் சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பளம் குறைப்பு என்பது தினமும் 20,000 ரூபாய்க்கு கீழே சம்பளம் பெறும் நடிகர்களுக்குப் பொருந்தாது.
அதே போல், தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களுடைய சம்பளத்தை 20% குறைக்க சம்மதித்துள்ளனர். இதில் 5 லட்ச ரூபாய்க்கு குறைவாகச் சம்பளம் பெரும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.