உள்நோக்கம் கொண்ட ஊடகங்களாலேயே ரியா பற்றிய வதந்திகள் பரப்பப்பட்டன - வழக்கறிஞர் சாடல்

உள்நோக்கம் கொண்ட ஊடகங்களாலேயே ரியா பற்றிய பொய்யான செய்திகள் பரப்பப்பட்டன என்று ரியாவின் வழக்கறிஞர் சதீஷ் மனிஷிண்டே குற்றம்சாட்டியுள்ளார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மர்ம மரணம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின்போது, சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரவர்த்தி சுஷாந்துக்குத் தெரியாமலேயே போதைப் பொருள் கொடுத்து, அவரது மனநிலையைப் பாதிக்கச் செய்ய முயன்றதாகப் புகார் எழுந்தது.

இது தொடர்பாக ரியா மற்றும் அவரது சகோதரர் ஷோவிக் உட்பட 12 பேரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் சுஷாந்த் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் துறை, சிபிஐயிடம் ஒப்படைத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் உள்நோக்கமும், தீய எண்ணமும் கொண்ட ஊடகங்களாலேயே ரியா பற்றிய பொய்யான செய்திகள் பரப்பப்பட்டன என்று ரியாவின் வழக்கறிஞர் சதீஷ் மனிஷிண்டே குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

சுஷாந்த் வழக்கு தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவர்கள் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைந்த அறிக்கையை படித்தேன். அதிகாரப்பூர்வ அறிக்கை எய்ம்ஸ் மற்றும் சிபிஐ வசமே உள்ளன. விசாரணைவின் முடிவில் அவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். எந்தவொரு சூழலில் உண்மையை மாற்ற முடியாது என்று ரியா சக்ரவர்த்தியின் சார்பாக நாங்கள் கூறிவந்தோம். உள்நோக்கமும், தீய எண்ணமும் கொண்ட ஊடகங்களாலேயே ரியா பற்றிய பொய்யான செய்திகள் பரப்பப்பட்டன. நாங்கள் உண்மையின் பக்கம் உறுதியாக நிற்கிறோம். சத்தியமே வெல்லும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE