விஜய்க்கு வில்லனாக ரசித்து நடித்தேன்: விஜய் சேதுபதி

By செய்திப்பிரிவு

விஜய்க்கு வில்லனாக ரசித்து நடித்தேன் என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் லலித் குமார் கைப்பற்றியுள்ளார். இந்தப் படத்தின் பணிகள் முழுமையாக முடிவடைந்துவிட்டாலும், கரோனா அச்சுறுத்தலால் இன்னும் வெளியாகாமல் உள்ளது.

அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு ஆயத்தமாகி வருகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. விஜய் - விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள முதல் படம் இதுவாகும். முன்னதாக விஜய் - விஜய் சேதுபதி இருவரும் இடம்பெற்ற போஸ்டரே இணையத்தில் லைக்குகளை அள்ளியது.

இதனிடையே, 'க/பெ ரணசிங்கம்' படத்தை விளம்பரப்படுத்த அளித்துள்ள பேட்டியில் 'மாஸ்டர்' படம் குறித்து விஜய் சேதுபதி கூறியிருப்பதாவது:

"எல்லோருக்குள்ளும் அழுக்கு இருக்கிறது. அதை ஒழிக்க எல்லோருக்கும் வழிகிடைக்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒருவர் வில்லனாக நடிக்கும் போது அந்த அழுக்கை வெளியே கொண்டு வர வழி கிடைக்கிறது. நான் கொடூரமான கேங்க்ஸ்டராக நடிக்கிறேன். ஆனால் அதை முழுக்க ரசித்து நடித்தேன்"

இவ்வாறு விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE