கார்த்தி நடித்து வரும் 'சுல்தான்' படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
'கைதி' படத்தின் படப்பிடிப்பின் போதே, பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் கார்த்தி. இதன் படப்பிடிப்பு திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது.
இதில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அவர் தமிழ்ப் படத்தில் நாயகியாக நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது. 'சுல்தான்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.
கார்த்தி, ராஷ்மிகா மந்தனா தவிர்த்து வேறு யாரெல்லாம் நடித்து வருகிறார்கள் என்பதை மிகவும் ரகசியமாக வைத்துள்ளது படக்குழு. விவேக் - மெர்வின் இசையமைப்பாளர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. சின்ன சின்ன காட்சிகள் மட்டுமே பாக்கியிருந்தது. இதன் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
தற்போது இதன் படப்பிடிப்பை சென்னையில் படமாக்கி வருகிறார்கள். இன்னும் ஓரிரு நாட்களில் 'சுல்தான்' படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து, இறுதிகட்டப் பணிகளைப் படக்குழு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது