இந்தியாவில் நல்ல ‘ஆக்‌ஷன்’ படங்கள் வருவதில்லை -  ‘வார்’ இயக்குநர் 

By ஏஎன்ஐ

இந்தியாவில் நல்ல ‘ஆக்‌ஷன்’ படங்கள் வருவதில்லை என்று ‘வார்’ திரைப்படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த் கூறியுள்ளார்.

ஹ்ரித்திக் ரோஷன் - டைகர் ஷ்ரோஃப் இணைந்து நடித்த திரைப்படம் ‘வார்’. இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்தார். ஆதித்யா சோப்ரா தயாரித்திருந்த இப்படத்தில் வாணி கபூர், அஷுடோஷ் ராணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டாம் க்ரூஸின் ‘மிஷன் இம்பாஸிபிள்’ பாணியில் எடுக்கப்பட்டிருந்த இப்படம் பெரும் வெற்றி பெற்றது.’

இந்நிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் (அக். 2) ஓராண்டு நிறைவடைகிறது. இதை கொண்டாடும் விதமாக ஹ்ரித்திக் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #1YearOfWar என்ற ஹாஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இப்படம் குறித்து இயக்குநர் சித்தார்த் ஆனந்த் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:

இப்படத்தின் கதையை எழுதிக் கொண்டிருந்தபோது இதை ஒரு ஆங்கிலப்படம் போல இருக்க வேண்டும் என்று எழுதினேன். பாடல்கள் இல்லாமல் ஒரு புதிய மொழியில் எழுதினேன். மொழி என்று நான் குறிப்பிட்டது பேசும் மொழியை அல்ல. படத்தின் மொழி. அதாவது காட்சிகள் அமைக்கப்பட்ட விதம்.

ஒவ்வொரு காட்சி அமைக்கப்பட்ட விதமும், அதன் திரைக்கதையும், சிக்கலான காலப் பிண்ணனியும் கொண்டு விறுவிறுப்பான த்ரில்லர் படமாக இது அமைந்தது. இப்படத்தில் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் இணைந்து நடிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. இப்போதெல்லாம் ஒரு படத்தில் ஒரு பெரிய நடிகரை நடிக்க வைப்பதே சிரமம். ஆனால் இரண்டு ஹீரோக்களை நடிக்க வைத்தது கனவு போல இருக்கிறது. எனவே, இயல்பாகவே இப்படத்தின் மீதான் எதிர்பார்ப்பு எகிறியது.

இரண்டு பெரிய நடிகர்கள் நடிக்கவுள்ளனர் என்றானவுடன் நாங்கள் ஒரு சிறந்த ‘பெஞ்ச்மார்க்’ திரைப்படத்தை தரவேண்டியிருந்தது. ஏனெனில் 2012ஆம் ஆண்டு நான் ஆக்‌ஷன் திரைப்படங்களை எடுக்க ஆரம்பித்த போது இங்கு எந்த ‘பெஞ்ச்மார்க்’ ஆக்‌ஷன் படங்களும் இல்லை என்பதை நான் அறிந்திருந்தேன். ஏனென்றால் அதிக ஆக்‌ஷன் படங்களையோ அல்லது நல்ல ஆக்‌ஷன் படங்களையோ இந்தியாவில் யாரும் எடுப்பதில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE