ட்விட்டரில் அவதூறு: நெட்டிசன்கள் மீது வழக்குத் தொடுத்த சல்மான் கானின் சகோதரர்

By ஐஏஎன்எஸ்

சல்மானின் கானின் சகோதரரும் நடிகருமான அர்பாஸ் கான் தன்னைப் பற்றி தவறான செய்திகளைப் பகிர்ந்த ட்விட்டர் பயனர்கள் மீது அவதூறு வழக்குத் தொடுத்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ விசாரி்த்து வருகிறது. சுஷாந்தின் காதலி ரியாவிடம் சிபிஐ நடத்திய விசாரணையில் அவருக்கு போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரியா உள்ளிட்ட பலர் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையின் பேரில் நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோன், ஷ்ரத்தா கபூர், சாரா அலி கான் உள்ளிட்டோருக்கு என்சிபி சம்மன் அனுப்பியது. அதன்படி கடந்த வாரம் அவர்கள் நால்வரும் என்சிபி அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில் சுஷாந்த் வழக்கில் சல்மான் கானின் சகோதரரும் நடிகருமான அர்பாஸ் கான் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் சமூக வலைதளங்களில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தவறான தகவல் பரவியது. இதைப் பலரும் பகிர்ந்து வந்தனர்.

இதனையடுத்து தன்னைப் பற்றிய தவறான செய்திகளைப் பரப்பியதாக அர்பாஸ் கான் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடுத்துள்ளார்.

அதில் ட்விட்டர் பயனர்களான விபோர் ஆனந்த், சாக்‌ஷி பண்டாரி, ஜான் டோ, அஷோக் குமார் உள்ளிட்டோர் தனக்கு எதிராகத் தொடர்ந்து அவதூறு செய்திகளைப் பரப்பி வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அர்பாஸ் கான் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE