5 முன்னணி இயக்குநர்கள் இணைந்துள்ள புத்தம் புது காலை

By செய்திப்பிரிவு

'புத்தம் புது காலை' என்ற ஆந்தாலஜியை 5 முன்னணி இயக்குநர்கள் இயக்கியுள்ளனர்.

கரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு பெரிய நடிகரின் படப்பிடிப்பும் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. தற்போது 75 நபர்களுடன் படப்பிடிப்பு என்பதை 100 நபர்களுடன் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால், இன்னும் சில நாட்களில் முன்னணி நடிகர்களின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, தயாராகியுள்ள படங்கள் அனைத்துமே ஓடிடி தளத்தில் வெளியிடப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதில் சில படங்கள் ஓடிடியில் வெளியானாலும், பல படங்கள் வரும் மாதங்களில் வெளியாகவுள்ளது.

மேலும், முன்னணி இயக்குநர்கள் பலரும் ஆந்தாலஜி பாணியில் படங்களை உருவாக்கத் தொடங்கியுள்ளனர். இதில் அமேசான் ப்ரைம் நிறுவனம் தயாரித்துள்ள ஆந்தாலஜி படம் இன்று (செப்டம்பர் 30) அறிவிக்கப்பட்டுள்ளது.

5 கதைகள் கொண்ட இந்த ஆந்தாலஜி படத்தை சுஹாசினி மணிரத்னம், ராஜீவ் மேனன், கெளதம் மேனன், சுதா கொங்கரா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இணைந்து இயக்கியுள்ளனர். அமேசான் ப்ரைம் நிறுவனத்தில் வெளியாகும் முதல் ஆந்தாலஜி படமாக இது அமைந்துள்ளது. அக்டோபர் 16-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது.

'புத்தம் புது காலை' என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த ஆந்தாலஜியில், ஒவ்வொரு இயக்குநருமே தனித்தனி பெயரில் 30 நிமிடங்களுக்கான படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE