எஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் ஆந்திர முதல்வருக்கு கமல் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செப்.25-ம் தேதி சிகிச்சை பலனின்றி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார். இது இந்தியத் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு விருதுகளை எஸ்பிபி வென்றிருந்தாலும், அவருக்கு பாரத ரத்னா, தாதா சாகேப் பால்கே விருதுகளை வழங்க வேண்டும் என்று திரையுலகினர் குரல் கொடுத்து வருகிறார்கள்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதம் சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தக் கடிதத்திற்காக ஆந்திர முதல்வருக்குக் கமல் நன்றி தெரிவித்துள்ளார். ஆந்திர முதல்வரின் கடிதத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கமல் கூறியிருப்பதாவது:
"ஆந்திர முதல்வருக்கு நன்றி. எங்கள் சகோதரர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நீங்கள் அளித்திருக்கும் கவுரவம், தமிழகம் மட்டுமல்லாது, நாடு முழுவதும் உள்ள அவரது குரலின் உண்மையான ரசிகர்களின் உணர்வை எதிரொலிக்கிறது".
இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்