எஸ்பிபிக்கு நேரில் அஞ்சலி செலுத்திய விஜய்: இறுதிச் சடங்கில் கலந்துகொண்டார்

By செய்திப்பிரிவு

எஸ்பிபியின் உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடைய மகன் சரணுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை காரணமாக கடந்த 4-ம் தேதி அவர் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார்.

கரோனா தொற்று நீங்கினாலும், நுரையீரல் தொற்று அதிகரித்துக் கொண்டே இருந்தது. மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் உறுப்புகளின் செயல்பாடு குறைந்து உடல்நிலை மேலும் மோசமடையத் தொடங்கியது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று நண்பகல் 1.04 மணிக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உயிர் பிரிந்தது.

இது இந்தியத் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக எஸ்பிபியின் நுங்கம்பாக்கம் வீட்டில் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தாமரைப்பாக்கத்தில் உள்ள எஸ்பிபியின் பண்ணை வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு, இன்று காலை இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

எஸ்பிபியின் உடலுக்குப் பூஜைகள் செய்யப்பட்டு, காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. எஸ்பிபியின் உடல் அடக்கம் நடக்கும் இடத்தில் உறவினர்கள், ஏராளமான ரசிகர்கள், ஊடகத்தினர், போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த நடிகர் விஜய், சரணிடம் பேசி தனது ஆறுதலைத் தெரிவித்தார். பின்னர் எஸ்பிபியின் உடல் அருகில் சென்ற விஜய், அவரது காலைத் தொட்டு வணங்கி இறுதி மரியாதையைச் செய்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE