ரஜினி நடித்த படங்களில், அவருக்கான அறிமுகப் பாடலை எஸ்பிபிதான் பெரும்பாலும் பாடியிருப்பார். அந்த பாடல்கள் அனைத்துமே மிகவும் பிரபலமானது. இறுதியாக வெளியான ‘தர்பார்’ படத்தில்கூட 'நான் தான்டா' என்ற அறிமுகப் பாடலைப் பாடியவர் எஸ்பிபிதான்.
தற்போது ரஜினியின் ‘அண்ணாத்த' படத்துக்காக பாடியுள்ளதுதான் எஸ்பிபியின் கடைசி பாடலாக இருக்கும் எனத் தெரிகிறது. அந்த படத்தில் இமான் இசையில் அறிமுகப் பாடலை எஸ்பிபி பாடியுள்ளார். இதை இமான் தனது ட்விட்டர் பதிவில் உறுதிசெய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘‘விரைவில் வெளிவர உள்ள ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினியின் அறிமுகப் பாடலை எஸ்பிபி பாடியுள்ளார். அவரது கடைசிப் பாடலை உருவாக்கிய வகையில், ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். எஸ்பிபி சார் அன்பானவர், பண்பானவர். அற்புதமான மனிதர். அவருக்கு மாற்றே கிடையாது. உங்களை மிஸ் பண்ணுவேன் எஸ்பிபி சார். லவ் யூ” என்று தெரிவித்துள்ளார்.