தன்னையே இழந்ததில் நிலா என்றும் அழுது கொண்டிருக்கும் என்று எஸ்பிபி மறைவுக்கு தமிழ்த் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதியாகி எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. பின்பு உடல்நிலை தேறி வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்தது.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல் இன்று (செப்டம்பர் 25) மதியம் 1:04 மணிக்கு காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அவற்றில் தமிழ்த் திரையுலகப் பிரபலங்களின் இரங்கல் தொகுப்பு:
யுவன்: இசை உங்கள் இழப்பை உணரும்
» இசை உலகுக்கு மிக இருண்ட நாள்: எஸ்பிபி மறைவுக்கு சிரஞ்சீவி உருக்கம்
» போதைப் போருள் வழக்கு: தீபிகா, சாரா அலி கான், ஷ்ரதா ஆகியோரிடம் நாளை விசாரணை
ஜிவிபிரகாஷ்: உங்கள் குரல் என்றும் நீடித்திருக்கும். அதற்கு முடிவே கிடையாது சார்.
மஞ்சிமா மோகன்: உங்கள் அற்புதமான பாடல்கள் மூலமாக நீங்கள் என்றும் எங்கள் இதயத்தில் வாழ்வீர்கள்.
வரலட்சுமி சரத்குமார்: நான் சொன்னது போல, இந்த வருடம் மோசமாகிக் கொண்டே போகிறது. இன்னொரு சகாப்தம் மறைந்து விட்டார். ஆன்மா சாந்தியடையட்டும் எஸ்பிபி அவர்களே. நாங்கள் (ஆனந்தத்தில்) தொலைந்து போகக் கூடிய ஒரு உலகை எங்களுக்கு நீங்கள் தந்திருக்கிறீர்கள். நீங்கள் எங்களது இதயத்தில், நினைவுகளில் என்றும் வாழ்வதைப் போல உங்கள் குரல், உங்கள் இசை என்றும் வாழும். உங்களுக்கு அமைதி கிடைக்கட்டும்.
ஹன்சிகா: அவர் பாடகர் மட்டுமல்ல, முழுமையான கலைஞர். தனது உணர்ச்சிகள், இசை மூலமாக இந்த உலகுக்குப் பொழுதுபோக்குத் தரவே அவர் பிறந்ததைப் போல இருக்கும். நமது துறைக்கு மிகப்பெரிய இழப்பு. விரைவில் நம்மை விட்டுச் சென்றுவிட்டார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்
கல்யாணி ப்ரியதர்ஷன்: இன்று என் இதயம் அதிகமாக கனத்து விட்டது. எங்கள் யாரையும் சந்திக்காமலேயே எங்களில் பலரது வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். எங்கள் வாழ்க்கையில், கலாச்சாரத்தில் ஒரு அங்கம் நீங்கள். இன்னும் வரும் பல தலைமுறைகளை உங்கள் குரல் ஈர்க்கும். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். உங்கள் கலை என்றும் வாழும்.
கெளதம் கார்த்திக்: இந்த வருடம் மிகக் கடுமையாக நம்மை தாக்கி வருகிறது. அனைவரது உள்ளத்தையும், ஆன்மாவையும் தனது குரலால் வருடிய ஒரு உண்மையான சகாப்தத்தை நாம் இழந்துவிட்டோம். அவரைப் போல இன்னொருவர் என்றும் வரவே முடியாது. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். அவர் குடும்பத்துக்கு என் அனுதாபங்கள்.
ராதிகா சரத்குமார்: வருத்தம், மனமுடைந்து போயிருக்கிறேன். அவரது வாழ்க்கையை அழகாக வாழ்ந்தார். சமூகத்துக்குப் பங்காற்றுவதும், இசையும் அவருக்கு உயிர். அவரது குரல் என்றும் நீடித்து வாழும். அவர் ஆன்மா சாந்தியடையட்டும்.
சூரி: கும்பிட்ட சாமி அத்தனையும் இப்டி கூண்டோட கைவிட்ருச்சே. ஆழ்ந்த இரங்கல்கள் சார்
செல்வராகவன்: தன்னையே இழந்ததில் நிலா என்றும் அழுது கொண்டிருக்கும்!
பிரசன்னா: இந்தத்தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேனென்றார். அவர் குரல் கேளாது ஒருநாளும் நம் வாழ்வு ஓடாது.
செளந்தர்ய ராஜா: ஒரு மாபெரும் சகாப்தம் இன்று மறைந்தது ..! இவரது பாடல்கள் ஒலிக்கும் வரை இவர் மறையப்போவது இல்லை. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
ஆர்யா: மனமுடைந்து போயிருக்கிறேன். உங்கள் இழப்பை உணர்வோம். அனைத்து இசைக்கும், நினைவுகளுக்கும் நன்றி.
லட்சுமி ராமகிருஷ்ணன்: எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு என் மரியாதை மற்றும் பிரார்த்தனைகள். இசை மற்றும் கலைத்துறைக்கு அவர் ஆற்றிய மாபெரும் பங்கின் மூலம் என்றும் நம் இதயத்தில் அவர் இருப்பார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆறுதல்.
டிடி: உங்கள் குரல் என்றும் வாழ்வும். என்றும் நீங்கள் கொண்டாடப்படுவீர்கள். உங்களுக்கு மாற்று என்பது என்றும், யாராலும் கிடையாது. இசை உலகில் உங்கள் இடத்தை நிரப்ப முடியாது. என்றும் நீங்கள் உணரப்படுவீர்கள். உங்கள் பாடல்கள் மூலமாக எங்கள் அத்தனை உணர்ச்சிகளிலும் இருந்ததற்கு நன்றி. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்.
அருண் விஜய்: நீங்கள் என்றும் எங்களுக்குள் வாழ்வீர்கள் சார்
க்ரிஷ்: என்னிடம் விவரிக்க வார்த்தைகள் இல்லை. என் இதயம் ரத்தம் சிந்துகிறது. நன்றாக ஓய்வெடுங்கள். என்றும் உங்களை நேசிக்கிறேன்.
ரம்யா கிருஷ்ணன்: மிக விசேஷமான ஒரு நபரை என்றும் மறக்க முடியாது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
ரம்யா: உண்மையான மாணிக்கம். ஒரு மாதம் வரை போராடி உங்கள் வலிமை அத்தனையையும் கொடுத்தீர்கள். அற்புதமான இசைக்கு நன்றி. வெற்றிகரமான நபர்கள் மிகக் கனிவானவர்களாகவும் இருப்பார்கள் என்பதைக் காட்டியதற்கு நன்றி. நீங்கள் இருக்கும் இடத்தில் உங்களின் வலி குறைந்திருக்கும் என நம்புகிறேன். வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு வருத்தத்தில் இருக்கிறேன்.
ஜெயம் ரவி: உங்கள் பரவசக் குரலால் என்றும் எங்கள் இதயத்தில் நீங்கள் வாழ்வீர்கள் சார். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்
ப்ரியாமணி : மனமுடைந்து போயிருக்கிறேன் எஸ்பி பாலசுப்பிரமணியம் சார். நீங்கள் பாடிய அத்தனை அற்புதமான பாடல்களுக்கு அன்றி. அவை மூலம் உங்களை இன்னும் அதிகமாக நேசிக்க வைத்தீர்கள். நீங்கள் என்றும் வாழ்வீர்கள்.
ஆர்.ஜே.பாலாஜி: இந்த 2020 ஆண்டு சபிக்கப்பட்டிருக்கிறது. எஸ்பிபி சார் இழப்பு எவ்வளவு பெரியது. உங்கள் இசைக்கு நன்றி எஸ்பிபி சார். உங்களைப் போல இன்னொருவர் என்றும் இருக்க முடியாது. ஒரு சகாப்தம், அவரது குரல் என்றும் நம்மிடையே வாழ்வும். ஆன்மா சாந்தியடையட்டும் சார்.
சந்தோஷ் சிவன்: ஒரு உண்மையான சகாப்தம். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்.
ஹரிஷ் கல்யாண்: உங்களைப் போன்ற ஒருவரை இந்த உலகம் பார்த்ததில்லை. இனியும் பார்க்காது. சாதனைப் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களே, உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். என்றும் எங்கள் இதயத்தில் வாழ்வீர்கள்.
சின்மயி: ஒரு சகாப்தம் நிறைவடைந்தது. அனைத்து நினைவுகளுக்கும் நன்றி. ஒரு பாடகர் அற்புதமான பாடகராகவும், நடிகராகவும், பின்னணிக் குரல் கலைஞராகவும், தயாரிப்பாளராகவும், இசையமைப்பாளராகவும் இன்னும் எத்தனையோ திறமைகளோடும் இருக்கலாம் என்று காட்டியதற்கு நன்றி. நீங்கள் அற்புதமான வாழ்வு வாழ்ந்தீர்கள். எல்லையில்லா காலகட்டத்துக்கு உங்கள் கலை வாழும். நான் என்றும் உங்களைக் கொண்டாடுவேன்.
சிபிராஜ்: எஸ்பிபி அவர்களின் இழப்பைக் கேள்விப்பட்டு மனமுடைந்து போனேன், அதிக வருத்தமடைந்தேன். அவரது பாடும் திறமையைத் தாண்டி அவர் எல்லோராலும் நேசிக்கப்பட்ட ஒரு நபர். உங்கள் இழப்பை உணர்வோம் சார்.